ஷா ஆலம், டிச 29 - சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகராக ஒரு காலத்தில்
விளங்கி வந்த கிள்ளான் விரைவில் மாநகர் அந்தஸ்தைப் பெறவுள்ளது.
இந்நிலையில், மாநகராகத் தரம் உயர்த்தப்பட்டவுடன் ஏற்படக்கூடிய
சவால்களைச் சமாளிக்க நாம் தயாராக இருக்க வேண்டும் என்று கிள்ளான்
நகராண்மைக் கழகத் தலைவர் நோராய்னி ரோஸ்லான் வலியுறுத்தினார்.
மாநகராக அந்தஸ்து பெற்றவுடன் ஏற்படக்கூடிய எந்த தடையையும்
எதிர்கொள்ள நகராண்மைக் கழகம் தயாராக இருக்க வேண்டும் என்று
கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் இவ்வாண்டிற்கான இறுதி மாதாந்திரக்
கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் குறிப்பிட்டார்.
ஆண்டு முழுவதும் தங்கள் பணிகளை அயராது மேற்கொண்ட
நகராண்மைக் கழகத்தின அனைத்துத் துறைகளுக்கும் தாம் நன்றி
தெரிவித்துக் கொள்வதாக அவர் சொன்னார்.
எதிர்வரும் 2024ஆம் ஆண்டில் கிள்ளான் மாநகர் அந்தஸ்து பெற்றவுடன்
ஏற்படக்கூடிய பல்வேறு சவால்களை எதிர்கொள்ள பிரதான முன்நிலை
அமைப்பு என்ற முறையில் கிள்ளான் நகராண்மைக் கழகம் முழு தயார்
நிலையில் இருக்கும் அதேவேளையில் உரிய வியூகங்களையும் வகுக்க
வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
சுத்தமான, நல்லிணக்கம் நிறைந்த மற்றும் வசிப்பதற்கு உகந்த நகராக
கிள்ளானை உருவாக்குவதற்கு ஏதுவாக அனைத்து பங்களிப்பாளர்களுடன்
ஒத்துழைப்பை நல்குவது மிக அவசியமாகும் என அவர் கூறினார்.
நிலையான வருமானத்தை உறுதி செய்ய வேண்டும், இந்நகரிலுள்ள 11
லட்சம் மக்களுக்கும் முழுமையான அடிப்படை வசதிகள் வழங்கப்பட
வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ததைத்
தொடர்ந்து கிள்ளானை மாநகராகப் பிரகடனப்படுத்த அமைச்சரவை கடந்த
ஜூலை மாதம் அனுமதி வழங்கியது.




