ஷா ஆலம், டிச 27- இவ்வாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 48 லட்சம் சுற்றுப் பயணிகள் சிலாங்கூருக்கு வருகை புரிந்துள்ளனர்.
காஃபே, பேரங்காடிகள் உள்ளிட்ட அறுசுவை உணவியல் யையங்கள் காரணமாகப் பெட்டாலிங் மாவட்டம் மிக அதிகமாக 28 லட்சம் சுற்றுப்பயணிகளை ஈர்த்துள்ளது என்று டூரிசம் சிலாங்கூர் வர்த்தகத் தொடர்பு நிர்வாகி அகமது நஸ்ரி தஷ்ரிக் ரஹ்மாட் தெரிவித்தார்.
கோல சிலாங்கூர் மற்றும் உலு சிலாங்கூர் மாவட்டங்களிலும் சுற்றுப்பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உலு சிலாங்கூரில் சுற்றுப்பயணிகள் எண்ணிக்கை 244.9 விழுக்காடு அதிகரித்து 58,353 பேராகவும் கோல சிலாங்கூரில் 181 விழுக்காடு உயர்வு கண்டு 48,660 பேராகவும் பதிவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூருக்கு வருகை புரிந்த கோலாலம்பூர், ஜோகூர், பேராக் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த உள்நாட்டுச் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை 38 விழுக்காடாக இருந்த வேளையில் ஜப்பான், இந்தியா, சீனா போன்ற நாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை 46 விழுக்காடாக இருந்தது என்றார் அவர்.
இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் 29 லட்சம் சுற்றுப்பயணிகள் சிலாங்கூருக்கு வருகை புரிந்ததாகச் சுற்றுலாத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சுயி லிம் அண்மையில் கூறியிருந்தார்.
கடந்த 2022ஆம் ஆண்டில் 2 கோடியே 20 லட்சம் சுற்றுப் பயணிகளை ஈர்த்ததன் மூலம் அதிக சுற்றுப் பயணிகளைக் கவர்ந்த மாநிலம் என்ற பெயரை சிலாங்கூர் தக்க வைத்துக் கொண்டது.




