ஷா ஆலம், டிச 27: இல்திசம் சிலாங்கூர் பென்யாயாங் (ISP) உதவித் திட்டம் தொடர்பான தகவல்களைத் தெரிவிப்பதற்காக முதியவர்களை சந்திக்க பாலகோங் சட்டமன்ற உறுப்பினர் முயற்சி எடுத்துள்ளார்.
ஸ்கீம் மெஸ்ர ஊசிய எமாஸ் திட்டம் (SMUE) தொடர்பான தகவல்களைப் பெறாத மூத்த குடிமக்கள் இன்னும் உள்ளனர் என ஓங் சுன் வெய் கூறினார்.
"104,000 பாலாகோங் தொகுதி வாக்காளர்கள் 20,000 பேர் மூத்த குடிமக்கள் ஆவர். எனவே அவர்கள் மாநில அரசிடமிருந்து பலன்களைப் பெறுவதை உறுதி செய்ய என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன்," என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.
மக்கள் எஹ்சான் ரஹ்மா விற்பனை மூலம் அடிப்படை பொருட்களை மலிவு விலையில் பெறுவதற்காகச் சிலாங்கூர் வேளாண்மை மேம்பாட்டுக் கழகத்துடன் தனது தரப்பு எப்போதும் தொடர்பில் இருப்பதாகவும் சுன் வெய் தெரிவித்தார்.
"பாலகோங்கில் மலிவு விற்பனையை நடத்துவதற்கு சிலாங்கூர் வேளாண்மை மேம்பாட்டுக் கழகத்திற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவோம். ஏனெனில் அது குறைந்த வருமானம் கொண்ட குழுக்களின் (B40) செலவுகளைக் குறைக்கும்.
"மேலும், பாலகோங் மாநில சட்டமன்ற சமூக சேவை மையம் மூலம் பெறப்பட்ட தகவல்களின் வழி வீடுகளுக்குச் சென்று உதவி தேவைப்படுபவர்களுக்கு நாங்கள் உதவுகிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.
இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட ஜோம் ஷாப்பிங் வவுச்சர்களின் மதிப்பு RM100லிருந்து RM150ஆக அதிகரித்ததை தொடர்ந்து ஸ்கீம் மெஸ்ர ஊசிய எமாஸ் திட்டதிற்கான விண்ணப்பங்கள் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக சமூக நலன் ஆட்சிக்குழு உறுப்பினர் நவம்பர் 14 அன்று அறிவித்தார்.
அக்டோபர் வரை மொத்தம் 110,566 முதியவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ள நிலையில் கடந்த ஆண்டு முழுவதும் 29,777 விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டன என அன்பால் சாரி தெரிவித்தார்




