ஷா ஆலம், டிச 19 - சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டு கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) ஆதரவிலான ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை வரும் வியாழக்கிழமை மற்றும் வார இறுதியில் ஆறு செகி ஃப்ரெஷ் கிளைகளில் நடத்தப்படும்.
கோழி, மீன், அரிசி உள்ளிட்ட சமையல் பொருட்களை மலிவான விலையில் பொதுமக்கள் வாங்குவதற்குரிய வாய்ப்பை வழங்கும் இந்த விற்பனை தெலுக் பங்ளிமா காராங்கில் வரும் வியாழக்கிழமை நடைபெறும் என்று செகி ஃப்ரெஷ் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.
காசே சாயாங் செகி ஃப்ரெஷ் எனும் இந்த விற்பனை கோல குபு பாரு, சௌஜானா உத்தாமா மற்றும் பந்திங் ஆகிய இடங்களில் வரும் சனிக்கிழமையும் தஞ்சோங் காராங், காஜாங், தாமான் அமினா மூலியா ஆகிய கிளைகளில் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறவிருக்கிறது.
.வாழ்க்கைச் செலவின அதிகரிப்பால் சிரமத்தை எதிர்நோக்கி இருக்கும் மக்களுக்கு குறிப்பாக பி40 தரப்பினருக்கு உதவும் நோக்கில் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து இந்த திட்டத்தை செகி ஃப்ரெஷ் நிறுவனம் அமல்படுத்தியுள்ளது.
இந்த விற்பனையில் கோழி ஒரு கிலோ 6.99 வெள்ளிக்கும் இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் சியாகாப் மீன் ஒன்று 7.00 வெள்ளிக்கும் டி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் கோதுமை ஒரு பாக்கெட் 2.00 வெள்ளிக்கும் சமையல் எண்ணெய் 5 கிலோ 25.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.
மலிவு விற்பனைத் திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில் பி.கே.பி.எஸ். மற்றும் செகி ஃப்ரெஷ் பேரங்காடிக்கும் இடையே கடந்த ஜூலை மாதம் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த மலிவு விற்பனை நடத்தப்படுகிறது.
சந்தையை விட குறைவான விலையில் பொருள்களை விற்பனை செய்வதன் மூலம் மக்களுடன் அணுக்கமான நட்புறவை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக செகி ஃப்ரெஷ் பேரங்காடி தனது பேஸ்புக் பதிவில் கூறியது.
இந்த ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனையை நடத்த மாநில அரசு இதுவரை 4 கோடி வெள்ளியை உதவித் தொகையாக வழங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் 2,850 இடங்களில் நடத்தப்பட்ட இந்த விற்பனை மூலம் சுமார் 50 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.




