பூச்சோங், டிச 19 - பூச்சோங், ஜாலான் வாவாசான் 3/9 மற்றும் ஜாலான்
பூச்சோங் வாவாசான் 3/14 ஆகிய சாலைகளை உள்ளடக்கிய பகுதியில்
நிலச்சரிவு ஏற்பட்ட மூன்றாவது தினமான நேற்று குறிப்பிடத்தக்க
வகையில் மண் நகர்வு எதுவும் கண்டறியப்படவில்லை.
பாதிக்கப்பட்ட இடத்தின் அடிப்பகுதியில் சிறிதளவு நீர் தேங்கியுள்ளதோடு
அங்குள்ள மரங்கள் மற்றும் தார் சாலையில் சிறிது நகர்வு உணரப்பட்டது
என்று செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஏ.ஏ. அன்பழகன்
கூறினார்.
அங்கு மண் நகர்வு ஏதும் கண்டறியப்படும் பட்சத்தில் அது பூமிக்குள்
இரும்புத் தூண்களைப் பதிக்கும் பைலிங் பணிகளால் உண்டான அதிர்வாக
இருக்கக்கூடும் என்று அவர் சொன்னார்.
மண் சரிவைத் தடுப்பதற்காக அங்கு வரிசையாக இரும்புத் தூண்களை
பதிக்கும் போது ஏற்படும் அதிர்வால் மண் மிருதுவாகும் சாத்தியம் உள்ளது
என சம்பவ இடத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர்
குறிப்பிட்டார்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட பகுதியைப் புவி அறிவியல் மற்றும் கனிம
வளத்துறையும் பொதுப்பணித்து துறையும் அணுக்கமாக கண்காணித்து
வருவதாகப் பெட்டாலிங் மாவட்ட மற்றும் நில அதிகாரி ரஹிலா ரஹ்மாட்
கூறினார்.
அந்த பகுதியில் பைலிங் பணிகள் வழக்கம் போல் நடைபெற்று
வருவதோடு அவ்வட்டார மக்களுக்குப் புதிதாக எந்த உத்தரவும்
பிறப்பிக்கப்படவில்லை என்பது பெர்னாமா அங்கு மேற்கொண்ட ஆய்வில்
தெரிய வந்தது.
கடந்த சனிக்கிழமை மாலை தாமான் வாவாசான் பூச்சோங்கில் நிலச்சரிவு
ஏற்பட்டதைத் தொடர்ந்து ஒன்பது வீடுகளைச் சேர்ந்த 29 பேர் அங்கிருந்த
வெளியேற்றப்பட்டனர்.




