ஷா ஆலம், டிச 13 - சந்தை தேவைக்கேற்ப பயற்சிப் பகுதிகளை
உருவாக்குவதற்கு ஏதுவாக சிலாங்கூர் திறன் மற்றும் வேலை வாய்ப்பு
மன்றம் அடுத்தாண்டில் உருவாக்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி கூறினார்.
தற்போது அங்கீகார நிலையில் உள்ள முதலீட்டுத் துறைகளை
அடிப்படையாகக் கொண்டு சந்தையில் தேவைப்படும் வேலை
வாய்ப்புகளை மதிப்பீடு செய்வதற்காக முதலாளிகள் மற்றும்
அமைப்புகளை இந்த சிறப்பு குழு ஒருங்கிணைக்கும் என்று அவர்
சொன்னார்.
அதே சமயம் தொழிலாளர்களின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதையும்
நடப்பிலுள்ள மற்றும் எதிர்காலத்தில் உருவாகக் கூடிய வேலை
வாய்ப்புகள் மூலம் மாநில மக்கள் பயன் பெறுவதை உறுதி செய்வதையும்
இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என அவர குறிப்பிட்டார்.
கணினி நிரல்களை எழுதும் பணியை இதற்கு உதாரணம் கூறலாம். இந்த
துறை மிகவும் பிரபலமானதாகவும் அதிகத் தேவை உள்ளதாகவும்
விளங்குகிறது. எனினும் சில வளாகங்களில் வழங்கப்படும் இத்தகைய
பயிற்சிகள் புதுப்பிக்கப்பட்டவையாகவும் புதிய தொழில்நுட்பங்களைக்
கொண்டவையாகவும் இல்லை என்றார் அவர்.
இந்த துறையில் படிப்பை முடித்த மாணவர்கள் சிறந்த நிரலாக்க
நிபுணர்கள் ஆவதற்கு நிபுணத்துவ பயிற்சிகளில் பங்கு கொள்ள
வேண்டியுள்ளது. இதன் அடிப்படையில் அடுத்தாண்டில் நாம்
மேற்கொள்ளவுள்ள அடிப்படைத் திட்டங்களில் இதுவும் ஒன்றாக
விளங்குகிறது என அவர் தெரிவித்தார்.
இங்குள்ள எஸ்.டி.டி.சி மையத்தில் நடைபெற்ற சிலாங்கூர் திறன்
மேம்பாட்டுக் கழகத்திற்கும் (எஸ்.டி.டி.சி.) திவேட் எனப்படும் தொழில் நுட்ப மற்றும் தொழில்திறன் பயிற்சித் திட்ட மையத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.




