ஷா ஆலம், டிச 12- ஷா ஆலம் மாநகர் மன்ற இந்திய ஊழியர்கள் சமூக நல அமைப்பின்
(பாக்கி) ஏற்பாட்டிலான தீபாவளி உபசரிப்பு கடந்த சனிக்கிழமை இங்குள்ள மாநகர்
மன்ற விருந்து மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மாநகர் மன்ற இந்தியப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்
உள்பட சுமார் 500 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்வுக்கு மாநகர் மன்றத்தில்
முன்னாள் உறுப்பினரும் வறுமை ஒழிப்புத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு
உறுப்பினருமான வீ.பாப்பாராய்டு தலைமை தாங்கினார்.
மாநகர் மன்றத்தின் இடைக்கால டத்தோ பண்டார் செரேமி தர்மான் மற்றும் மாநகர் மன்ற
உறுப்பினர்கள், மாநகர் மன்ற ஊழியர் நலச் சங்கத்தின் தலைவர் ஹனிப் பாஸ்ரி
உள்ளிட்டோர் இந்நிகழ்வில் சிறப்பு பிரமுகர்களாகக் கலந்து கொண்டனர்.
இந்த விருந்து நிகழ்வில் சிறப்புரையாற்றிய பாப்பாராய்டு, உறுப்பினர்களின்
நலனுக்காக பல்வேறு திட்டங்களை தொடர்ந்து அமல்படுத்தி வரும் பாக்கி
அமைப்புக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.
இந்த பாக்கி அமைப்பின் திட்டங்களுக்கு உறுதுணையாக இருந்து முழு
ஆதரவை வழங்கி வரும் மாநகர் மன்றத்தின் பொறுப்பாளர்களுக்கு அவர்
நன்றி தெரிவித்துக் கொண்டார்.
ஷா ஆலம் மாநகர் மன்றத்தில் பணியாற்றும் இந்தியர்கள் பணி ஓய்வு
பெறும் நிலையில் அங்கு இந்தியப் பணியாளர்களின் எண்ணிக்கை
குறைந்து வருவதைக் சுட்டிக் காட்டிய அவர், புதிதாகப் பணியாளர்களைத்
தருவிக்கும் போது இந்தியர்களுக்கு உரிய வாய்ப்புகளை வழங்கும்படி
மாநகர் மன்றத்தை அவர் கேட்டுக் கொண்டார்.
முன்னதாக இந்நிகழ்வில் வரவேற்புரையாற்றிய பாக்கி அமைப்பின்
தலைவர் எஸ். தங்கராஜூ, இவ்வாண்டில் இந்த அமைப்பின் ஏற்பாட்டில்
நடத்தப்படும் நான்காவது நிகழ்வாக இந்த தீபாவளி விருந்துபசரிப்பு
விளங்குகிறது என்றார். காதர் இப்ராஹிம் மற்றும் ரஹிம் முன்னாவின்
தன் முனைப்பு பயிற்சிகளும் முக ஒப்பனைப் பயிற்சியும் மாநகர் மன்ற இந்தியப் பணியாளர்களுக்காக இவ்வாண்டு பிரத்தியேகமாக நடத்தப்பட்டன என்றார் அவர்.
கடந்த பதினைந்து ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இந்த பாக்கி
அமைப்பில் தற்போது 84 பேர் உள்ளதாக கூறிய அவர், இந்த விருந்து
நிகழ்வுக்கான முழு செலவையும் ஏற்றுக் கொண்டதோடு இந்த அமைப்பு
வெற்றிகரமாகச் செயல்படுவதற்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பை
நல்கி வரும் மாநகர் மன்றத்தின் டத்தோ பண்டார் உள்பட அனைத்து
நிர்வாகப் பொறுப்பாளர்களுக்கும் தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகச்
சொன்னார்.




