செய்தி சு.சுப்பையா
செந்தோசா.டிச.10- சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள எல்லா தமிழ்ப் பள்ளிகளுக்கும் ஆண்டு தோறும் மானியம் வழங்கப் படுகிறது. இதே போல் பெரும்பான்மையான ஆலயங்களுக்கும் ஆண்டுதோறும் மானியம் வழங்கி வருவது சிலாங்கூர் மாநிலத்தின் தனி சிறப்பு என்று சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் சாரி பெருமிதத்துடன் கூறினார்.
நேற்று செந்தோசா சட்டமன்ற தொகுதியில் கோலா கலமாக தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகராக மந்திரி புசார் கலந்து கொண்டு உரையாற்றினார்.
நம்பிக்கை கூட்டணி சிலாங்கூர் மாநில ஆட்சியை கைப்பற்றிய பிறகு தான் சிலாங்கூரில் உள்ள தமிழ்ப் பள்ளிகள் ஆலயங்கள் முறையாக அதன் நிலங்கள் அரசு பதிவேட்டில் அங்கீகரிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடினார். 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் முதல் இந்தியர்கள் பெரும்பான்மையாக நம்பிக்கை கூட்டணிக்கு வாக்களித்து வருகின்றனர்.
இந்தியர்களின் ஆதரவை திசை திருப்பு தற்போது எதிர்க்கட்சிகள் புதிய தளத்தை உருவாக்க முனைகின்றனர். அவர்களுக்கு எதிராக இந்தியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தற்போது ஒரு சிலர் எதிர்க்கட்சிகளுக்கு இந்தியர்களின் ஆதரவை திரட்ட புதிய கட்சிகள் தொடங்கி வருகின்றனர். இவர்களிடம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சூசகமாக கேட்டுக் கொண்டார்.


