கோலாலம்பூர், நவ.28 - அடுத்தாண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நேற்றிரவு மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
கடந்த அக்டோபர் மாதம் 6ஆம் தேதி முதல் கொள்கை மற்றும் குழு நிலைகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களால் விவாதிக்கப்பட்ட பின்னர் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா மீதான துணை நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அகமது மஸ்லானின் மூன்றாவது வாசிப்புக்குப் பிறகு மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ ஜோஹாரி அப்துல் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
"பொருளாதார சீர்திருத்தங்கள், மக்களுக்கு அதிகாரமளித்தல்" என்ற கருப்பொருளைக் கொண்ட 2024ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை கடந்த அக்டோபர் 13ஆம் தேதி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் மொத்தம் 39,380 கோடி வெள்ளியை உள்ளடக்கியுள்ளது. இது மலேசிய வரலாற்றில் இதுவரை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுகளில் அதிகத் தொகையைக் கொண்டதாகும்.
இந்த வரவு செலவுத் திட்டத்தில் 30,380 கோடி வெள்ளி நடவடிக்கைச் செலவினங்களுக்கும் 9,000 கோடி வெள்ளி மேம்பாட்டுச் செலவினங்களுக்கும் 200 கோடி வெள்ளி எதிர்பாரா நிகழ்வுகளுக்கான சேமிப்பிற்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.




