ஷா ஆலம், நவ 27- ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் வரும் டிசம்பர் 1 முதல் 10 வரை நடைபெறவிருக்கும் 2923ஆம் ஆண்டு சிலாங்கூர் அனைத்துலக புத்தகக் கண்காட்சியில் பங்கேற்கும் நாடுகளில் கொரியா, சீனா மற்றும் துருக்கி ஆகியவையும் அடங்கும்.
உள்நாடு மற்றும் வெளி நாடுகளைச் சேர்ந்த 156 பதிப்பக நிறுவனங்கள் தங்கள் புத்தகங்களை விளம்பரப்படுத்த மொத்தம் 272 கண்காட்சிக்கூடங்களை வாடகைக்கு எடுத்துள்ளதாக சிலாங்கூர் பொது நூலகக் கழகத்தின் (பி.பி.ஏ.எஸ் ) இயக்குநர் கூறினார்.
இந்த கண்காட்சிக்கான ஏற்பாடுகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டு வருகின்றன. நேப்பாளம், இந்தோனேசியா, அஜர்பைஜான், பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா, கொரியா, துருக்கி மற்றும் சீனா உள்ளிட்ட சர்வதேச வெளியீட்டு நிறுவனங்கள் மொத்தம் 20 கண்காட்சிக்கூடங்கள் வாடகைக்கு எடுத்துள்ளன.
சிறு தொழில்முனைவோர் வர்த்தகம் புரிவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள 63 காட்சிக்கூடங்கள் மட்டுமே மீதம் உள்ளன என்று டத்தின் பாதுகா மஸ்துரா முகமது கூறினார்.
அதிகமான பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் பள்ளிகள் முழுவதும் இந்த கண்காட்சி குறித்து விளம்பரப் படுத்தப்பட்டுள்ளதாக சமீபத்தில் ராஜா துன் உடா நூலக அறக்கட்டளையின் தொடக்க விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
இந்த கண்காட்சியில் கவர்ச்சிகரமான தள்ளுபடி விலையுடன் பல்வேறு வகையான புத்தகங்களின் விற்பனைக்கு வைக்கப்படுவதாகக் கூறிய அவர், தினசரி ஒன்பது வருகையாளர்கள் 500 வெள்ளி ரொக்கப் பரிசை வெல்வதற்குரிய வாய்ப்பு உள்ளதாகவும் சொன்னார்.


