கோலாலம்பூர், நவ. 23: தேசிய வீட்டுவசதித் துறையானது 2030ஆம் ஆண்டுக்குள் பழைய மற்றும் கைவிடப்பட்ட வீட்டுத் திட்டங்களின் எண்ணிக்கையை மூன்று சதவீதமாகக் குறைக்க உத்தேசித்துள்ளதாக அதன் இயக்குநர் ஜெனரல் டத்தோ கே.என் ஜெயசீலன் தெரிவித்தார்.
அதற்காகப் பழைய மற்றும் கைவிடப்பட்ட வீட்டுத்திட்டத்தின் பிரச்சனையை தீர்க்க தமது தரப்பு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்றார்.
"இதுவரை 117 வீட்டுத் திட்டங்கள் கைவிடப்பட்டவை மற்றும் 497 பழைய திட்டங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
நேற்று பெர்னாமா வானொலியின் ஜென்டேலா ஃபிகிர் நிகழ்ச்சியில் விருந்தினராகக் கலந்து கொண்ட அவர், “இந்த வகைக்குள் வரும் வீட்டுத் திட்டங்கள் தற்போது 15 சதவீதத்தில் இருந்து 2030ல் மூன்று சதவீதமாகக் குறைக்கப் படுவதை உறுதிசெய்ய விரும்புகிறோம்.
முதற்கட்டமாகப், பழைய திட்டங்கள் என வகைப் படுத்தப்படும் திட்டங்களைக் குறைக்க தமது தரப்பு முயற்சி செய்யும் என்றார் ஜெயசீலன்.
உள்ளூராட்சி அபிவிருத்தி பிரதியமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முகமட் நசீர் தலைமையிலான பணிக்குழுவின் ஊடாக தற்போது பழைய திட்டங்கள் மீளமைக்கப் படும் என அவர் தெரிவித்தார்.
"ஒவ்வொரு மாதமும், இந்த சிக்கலை எவ்வாறு சமாளிப்பது என்பதை பற்றி கலந்துரையாடி, வெற்றிகரமாக மீட்டெடுக்கப்பட்ட திட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடுவோம்," என்று அவர் கூறினார்.
– பெர்னாமா




