ஷா ஆலம், நவ 23 - கழிவுப் பொருள்களை எரிசக்தியாக மாற்றும் ஆலைத்
திட்டத்தின் (டபள்யூ.டி.இ.) வியூக பங்காளியாக ஒய்.டி.எல். பவர்
இண்டர்நேஷனல் பெர்ஹாட் நிறுவனத்தை நியமிக்கும் விவகாரத்தில்
வெளிப்படைத் தன்மை கடைபிடிக்கப்பட்டதோடு முறையான
நடைமுறைகளும் பின்பற்றப்பட்டன.
இந்த திட்டத்திற்கான டெண்டர் கோரும் விளம்பரங்கள் கடந்த 2019ஆம்
ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி தொடங்கி ஊடகங்களில் வெளிப்படையாக
வெளியிடப்பட்டதாக ஊராட்சி மன்ற மேம்பாட்டுத் துறைக்கான
ஆட்சிக்குழு உறுப்பினர் இங் சுயி லிம் கூறினார்.
கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட்
(கே.டி.இ.பி.டபள்யூ.எம்.) நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும்
இத்திட்டத்தில் பங்கு கொள்வதற்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச்
சேர்ந்த 38 நிறுவனங்கள் ஆர்வம் காட்டியதாக அவர் தெரிவித்தார்.
அந்நிறுவனங்களின் ஆற்றல் மீது நிபுணர்கள் விரிவான ஆய்வினை
மேற்கொண்டனர். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பரிந்துரைத்த
தொழில்நுட்பத்தின் ஆக்கத்தன்மையைக் கண்டறிவதற்காக இறுதி கள
மதிப்பீடு செய்யப்பட்டது.
இந்த ஆய்வின் அடிப்படையில் ஒய்.டி.எல். பவர் இண்டர்நேஷனல்
பெர்ஹாட் நிறுவனத்தை இத்திட்டத்திற்கான வியூக பங்காளியாகச் சேர்க்க
இயக்குநர் வாரியம் முடிவெடுத்தது என்று அவர் சொன்னார்.
மதிப்பீட்டுக் குழு நிர்ணயித்த ஆற்றல் மற்றும் எரிசக்தி துறையில் உள்ள
அனுபவம் உள்ளிட்ட அனைத்து அளவுகோல்களையும் அந்நிறுவனம்
கடந்ததைத் தொடர்ந்து இந்த தேர்வு இறுதி செய்யப்பட்டது என்றார் அவர்.
மாநில சட்டமன்றத்தில் இன்று டபள்யூ.டி.இ. திட்டத்தின் வியூக
பங்காளியாக ஒய்.டி.எல். பவர் இண்டர்நேஷனல் நிறுவனத்தை தேர்ந்தெடுப்பதில் பின்பற்றப்பட்ட நடைமுறை குறித்து கோம்பாக் செத்தியா தொகுதி உறுப்பினர் ஹில்மான் இட்ஹாம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.




