ஷா ஆலம், நவ 22- சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகத்திற்கு (பி கே என்.எஸ் ) சொந்தமான முதல் மருத்துவமனையான செல்கேட் ரவாங் மருத்துவமனை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் செயல்படத் தொடங்கும் என்று பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் கூறினார்.
மொத்தம் 14 கோடியே 85 லட்சம் வெள்ளி செலவிலான இந்த மருத்துவமனையின் கட்டுமானம் தற்போது 47.9 விழுக்காட்டை எட்டியுள்ளது என்று ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்தார்.
230 படுக்கைகளைக் கொண்ட இந்த மருத்துவமனையின் முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்டப் பணிகளுக்கான புதிய மேம்பாட்டாளரின் கட்டுமான செலவு மொத்தம்14 கோடியே 85 லட்சம் வெள்ளியாகும். 95 படுக்கைகளை உள்ளடக்கிய பழைய கட்டுமான நிறுவனத்தின் முதல் கட்டப் பணிக்கானச் செலவு 8 கோடியே 30 லட்சம் வெள்ளியாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்
புதிய கட்டுமானப் பணிகளில் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் செலவு 26 விழுக்காடு குறைந்துள்ளது என்றார் அவர்
மாநில சட்டமன்றத்தில் இன்று மேம்பாட்டாளர் மாற்றப்பட்டப் பிறகு கட்டுமான செலவு உட்பட செல்கேட் ரவாங் மருத்துவமனை கட்டுமானத்தின் சமீபத்திய நிலை குறித்து கோல குபு பாரு உறுப்பினர் லீ கீ ஹியோங் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நிறைவடையவிருந்த செல்கேட் ரவாங் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் கோவிட்-19 பெருந் தொற்று ஆகிய காரணங்களால் தாமதமானது என்று ஜமாலியா விளக்கினார்.
இந்தத் திட்டத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாகக் கூடுதல் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டிய நிர்பந்தம் உண்டானது. கட்டுமான அட்டவணையில் பணி அதிகரிப்புக்கும் இது வழிவகுத்தது என அவர் சொன்னார்.




