ஷா ஆலம், நவ 22 – துணை நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்வது வழக்கத்திற்கு மாறானது அல்ல. ஏனென்றால், பொதுவாக வருடாந்திர விநியோக மசோதாவைத் தயாரிக்கும் போது கருத்தில் கொள்ளப்படாத எதிர்பாராத செலவினங்களை இது உள்ளடக்கியிருக்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த ஆண்டுக்கான செலவுகளுக்கு கூடுதலாக12 கோடியே 50 லட்சம் வெள்ளியை 2023 துணை நிதி நிலை அறிக்கை சட்ட மசோதாவின் கீழ் மாநில அரசு கோரியது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு கூறினார்.
மாநில சட்டமன்றத்தில் உரையாற்றிய அமிருடின், உலு கிளாங் சட்டமன்ற உறுப்பினரான அஸ்மின் கடந்த 2015 ஆம் ஆண்டு மாநில மந்திரி புசாராக இருந்தபோது சிலாங்கூர் துணை நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்து நிறைவேற்றியதையும் நினைவுக் கூர்ந்தார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு வெள்ளப் பேரிடரின் எதிரொலியாகத் துணை நிதி நிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல் கடந்த 2019இல் நான் கூடுதலாக 12 கோடியே 30 லட்சம் வெள்ளி கோரினேன். இந்த ஆண்டுக்கான 12 கோடியே 50 லட்சம் வெள்ளி கோரிக்கை நியாயமானது என்று கருதுகிறேன் என்றார் அவர்.
பல்வேறு காரணங்களால் கடந்த காலங்களில் துணை நிதி நிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. எடுத்துக்காட்டாக, 2015ஆம் ஆண்டை எடுத்துக்கொள்வோம். கூடுதலாக10 கோடியே 51 லட்சத்து 5 0 ஆயிரம் வெள்ளி ஒதுக்கப்பட்டது, 2014ல் இது 49 கோடியே 80 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளியை தொகையை உள்ளடக்கியிருந்தது என அவர் சொன்னார்.
அஸ்மின் அலி கடந்த 2014 செப்டம்பர் மாதம் சிலாங்கூர் மந்திரி புசார் ஆனார். ஜூன் 2018 வரை அவர் அந்தப் பதவியில் பணியாற்றினார்.
முன்னதாக, சட்டமன்றத்தில் பேசிய சிலாங்கூர் பெரிக்காத்தான் நேஷனல் தலைவருமான அஸ்மின், நல்ல மற்றும் பொறுப்பான அரசாங்கத்திற்கு உபரி பட்ஜெட் தேவையில்லை என்று வாதிட்டார். ஏனெனில் தேவையான அனைத்து செலவுகளும் வருடாந்திர பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே திட்டமிடப்பட்டிருக்கும் என அவர் சொன்னார்.




