ஷா ஆலம், நவ 22 - மாநிலத்திலுள்ள அனைத்து 56 சட்டமன்றத்
தொகுதிகளிலும் விளையாட்டு வசதிகளை தரம் உயர்த்த மாநில அரசு
தலா 100,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.
இது தவிர, புட்சால் விளையாட்டுத் திடல் போன்ற புதிய விளையாட்டு
வசதிகளை நிர்மாணிப்பதற்கு அத்தொகுதிகளுக்குக் கூடுதலாக 200,000
வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் பொர்ஹான் அமான் ஷா கூறினார்.
அனைத்து தொகுதிகளிலும் உள்ள கால்பந்து திடல்களை சீரமைப்பதற்கும்
புதிதாக நிர்மாணிப்பதற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட 250,000 வெள்ளி நிதி
இந்த மானியத்தில் உள்ளடங்கவில்லை என்று அவர் சொன்னார்.
மலேசிய போட்டி விளையாட்டு (சுக்மா) அமைப்பின் கீழுள்ள விளையாட்டு
வசதிகளை புனரமைப்பதற்கு பத்து லட்சம் வெள்ளி வழங்கப்பட்டுள்ளதாகக்
கூறிய அவர், அந்த வசதிகளை பொது மக்களின் பயன்பாட்டிற்கும் திறந்து
விட வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது
என்றார்.
மாநில சட்டமன்றத்தில் இன்று அனைத்து தொகுதிகளிலும் உள்ள
பழுதடைந்த விளையாட்டு திடல்களை சீரமைப்பதற்கு ஒதுக்கீடு
செய்யப்பட்ட நிதி குறித்து புக்கிட் மெலாவத்தி உறுப்பினர் டத்தோ
நோராஸ்லி யாஹ்யா எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர்
இதனைத் தெரிவித்தார்.
விளையாட்டு வசதிகளை தரம் உயர்த்தும் மற்றும் புதிதாக நிர்மாணிக்கும்
பணிகளை சிலாங்கூர் மாநில விளையாட்டு மன்றம் மேற்கொள்ளும்
என்றும் அவர் சொன்னார்.
கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி மாநில ஆட்சிக்குழு
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி விளையாட்டு வசதிகளைச்
சீரமைக்கும் பணிகளை சிலாங்கூர் மாநில விளையாட்டு மன்றமே
மேற்கொள்ளும். ஆகவே, இதற்கான நிதி ஒதுக்கீடு ஊராட்சி
மன்றங்களிடம் ஒப்படைக்கப்படாது என்றார் அவர்.




