ஷா ஆலம், நவ 22- எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்குள் சிலாங்கூர் விவேக மாநிலமாக மாறவுள்ள நிலையில் அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் முறையாகச் சேவை கிடைப்பதை உறுதி செய்ய மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் துறைகளில் சேவை முகப்பிடங்கள் தொடர்ந்து செயல்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இலக்கவியல் மாற்றம் முக்கிய நோக்கமாக இருந்தாலும் அனைவரும் எளிதாக அணுகி அரசு சேவைகளைப் பெறுவதை உறுதிசெய்ய சேவை முகப்பிடங்கள் இன்னும் தேவைப்படுகின்றன என்று சொன்னார்.
மாநில சட்டமமன்றத்தில் இன்று புக்கிட் காசிங் உறுப்பினர் ஆர். ராஜீவின் கேள்விக்குப் பதிலளித்த அவர், அரசு சேவைகளை இயங்கலைக்கு மாற்ற முடியும் என்றாலும், வரவிருக்கும் ஆண்டுகளில் தடையற்ற மாற்றத்தை (விவேக நிலைக்கு) உறுதிசெய்ய நேரடித் தொடர்பு சார்ந்த சேவை முகப்பிடங்கள் தேவை என்று நான் நம்புகிறேன் என்றார்.
எதிர்வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் விவேக மாநிலமாக மாறுவதற்கான திட்டத்தின் நடப்பு மேம்பாடு மற்றும் சேவை முகப்பிடங்கள் முற்றிலுமாக அகற்றப்படும் சாத்தியம் குறித்து ராஜீவ் கேள்வியெழுப்பியிருந்தார்.
மக்களுடன் நேரடித் தொடரபைக் கொண்ட சேவைகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அமிருடின், இலக்கவியல் தளங்களில் வெவ்வேறு அளவு பரிட்சயம் கொண்ட மற்றும் பலதரப்பட்ட பின்னணியில் உள்ள மக்களை அணுகும் வாய்ப்பை அரசு ஊழியர்கள் பெற இடமளிக்க வேண்டும் என்றார்.
கோவிட்-19 தொற்று நோயை உதாரணமாகக் குறிப்பிட்ட அவர், அரசாங்க அலுவலகங்களில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய இடங்களில் ஆவணங்களை இணையம் வாயிலாக சமர்ப்பித்தல் போன்ற பணிகளை இலக்கவியைல் முறையில் மாற்றியமைக்க மாநில அரசு கற்றுக்கொண்டது என்றார்




