ஷா ஆலம், நவ 21- இங்குள்ள செக்சன் 18, ஸ்ரீ மகா படபத்தர காளியம்மன் ஆலய நிலப் பிரச்சனைக்குத் தீர்வு காண ஊராட்சி மன்ற மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் சுயி லிம்முடன் தாம் சந்திப்பு நடத்த விரும்புவதாகச் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்தார்.
இந்த ஆலயம் தொடர்பில் மாநில சட்டமன்றத்தில் இங் சுயி லிம் அளித்த விளக்கத்திற்குப் பதிலளித்த அவர், இவ்வாலய விவகாரத்திற்கு சுமூகமான முறையில் தீர்வு காண்பதற்கு ஏதுவாக தாம் லிம்மை நேரில் சந்தித்து விளக்கமளிக்க விரும்புவதாகக் குறிப்பிட்டார்.
நல்லிணக்க அடிப்படையில் இந்த ஆலய நிலப் பிரச்சனைக்குத் தீர்வு காண நான் விரும்புகிறேன். இதன் தொடர்பில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் கவனத்திற்கும் இந்த ஆலய பிரச்சனையைக் கொண்டுச் சென்று நிரந்தர தீர்வு காண்பதற்கு உதவும்படி கேட்டுக் கொண்டுள்ளோன்.
இந்த ஆலய விவகாரம் குறித்து விளக்குவதற்கு நீண்ட நேரம் பிடிக்கும் ஆகவே. ஆட்சிக்குழு சந்திப்புக்கான வாய்ப்பை வழங்கினால் இரு தரப்பும் ஒன்றாக அமர்ந்து இப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்குரிய வழிகளை காண முடியும் என்றார் அவர்.
முப்பது ஆண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்த ஆலயங்கள் அதே இடத்தில் நிலைநிறுத்தப்பட வேண்டும் என மாநில அரசு கடந்த 2008ஆம் ஆண்டில் எடுத்த முடிவையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்று அவர் சொன்னார்.
முன்னதாக மாநில சட்டத்தில் பேசிய ஆட்சிக்குழு உறுப்பினர் இங், செக்சன் 18இல் இந்த ஆலயம் அமைந்துள்ள இடம் கே.பிஜே. நிபுணத்துவ மருத்துவமனை நிர்வாகத்திற்குச் சொந்தமானது என்பதோடு இந்த ஆலயத்தை இடமாற்றம் செய்வதற்கு ஷா ஆலம் உயர்நீதிமன்றம் கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி ஆணை பிறப்பித்தது என்று சொன்னார்.
ஷா ஆலம் வட்டாரத்திலுள்ள இந்து ஆலயங்களை அமைப்பதற்காக முந்தைய அரசினால் ஒதுக்கப்பட்ட ஒருங்கிணைந்த வழிபாடுத்தலங்களுக்கான தொகுதியில் படபத்தர காளியம்மன் ஆலயத்திற்கும் 926.06 சதுர மீட்டர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நிலம் தற்போது ஆலயம் அமைந்துள்ள இடத்திலிருந்து 100 மீட்டருக்குக் குறைவான தொலைவில் அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.




