SELANGOR

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மாநில அரசு விரிவான ஆய்வை மேற்கொண்டு வருகிறது

20 நவம்பர் 2023, 8:44 AM
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மாநில அரசு விரிவான ஆய்வை மேற்கொண்டு வருகிறது

ஷா ஆலம், நவ 20: பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் வளர்ச்சியை அடைய எடுக்கப்பட வேண்டிய ஒருங்கிணைந்த நடவடிக்கைகளைக் கண்டறிய மாநில அரசு விரிவான ஆய்வை மேற்கொண்டு வருகிறது.

டிசம்பர் 1, 2022 முதல் ஜூன் 30 வரை ஏழு மாதங்களுக்குச் சிலாங்கூர் மாநிலக் காலநிலை மாற்றக் கொள்கை ஆய்வு தென்கிழக்கு ஆசிய பேரிடர் ஆய்வு மையத்தால் நடத்தப் பட்டதாகச் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் கூறினார்.

தகவல் அமைப்பு, தணிப்பு மற்றும் பேரிடர் இடர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் இருந்து காலநிலை மாற்றத்தை இந்த ஆய்வு கணக்கில் எடுத்துக் கொள்கிறது என ஜமாலியா ஜமாலுடின் கருத்து தெரிவித்தார்.

"முதல் கட்டத்தில், கடல் மட்டம் உயரும் அபாயம் உள்ள கடலோரப் பகுதியான கோலா சிலாங்கூர், திடீர் வெள்ள அபாயம் உள்ள ஷா ஆலம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதியான அம்பாங் ஜெயா ஆகிய இடங்களின் ஆய்வு முடிவுகளை மாநிலம் பெற்றுள்ளது.

"இரண்டாம் கட்ட ஆய்வு ஒன்பது உள்ளாட்சி அமைப்புகளில் (பிபிடி) தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டம் காலநிலை மாற்றத்தின் கூறுகளைக் கணக்கில் கொண்டு, பிபிடி அளவில் வளர்ச்சி செயலாக்க வழிகாட்டுதல்களை வழங்கும்," என்று அவர் கூறினார்.

இன்று நடைபெற்ற சிலாங்கூர் மாநில சட்டமன்ற அமர்வில், சிலாங்கூர் 2030 காலநிலை மாற்ற செயல் திட்டம், கொள்கையின் சமீபத்திய நிலை மற்றும் செயல்படுத்தல் நிலை ஆகியவற்றை அறிய விரும்பிய தாமான் மேடான் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் அஃபிஃப் பஹார்டின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

ஷா ஆலம், கோலா சிலாங்கூர் மற்றும் அம்பாங் ஜெயா ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட முன்னோட்ட ஆய்வின் முடிவுகள் மற்ற ஒன்பது பிபிடிகளுக்கான செயல் திட்டங்களையும் கொள்கைகளையும் வகுப்பதில் அடிப்படையாகப் பயன்படுத்தப்படும் என்று ஜமாலியா தெரிவித்தார்.

"இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள், கட்டமைப்பு மற்றும் செயல் திட்டம் ஆகியவை சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் பசுமை தொழில்நுட்பத்திற்கான நிலைக்குழு மற்றும் மாநில அரசால் நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழுவால் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

"இந்தக் கொள்கை மார்ச் 2024க்குள் முழுமையாக முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.