ஷா ஆலம், நவ 20 - ஊராட்சி மன்ற சேவை ஆணையத்தை அடுத்தாண்டில்
அமைக்க மாநில அரசு எடுத்துள்ள முடிவை ஷா ஆலம் மாநகர் மன்றம்
வரவேற்றுள்ளது.
ஊழியர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு இந்த
ஆணையம் துணை புரியும் என்பதோடு ஊராட்சி மன்றங்கள் தங்கள்
சேவையை மேலும் ஆக்ககரமான முறையில் மேற்கொள்வதற்கும் வழி
வகுக்கும் என ஷா ஆலம் இடைக்கால டத்தோ பண்டார் இஞ்சினியர்
செரேமி தர்மான் கூறினார்.
நமது பணிகளை மற்ற ஊராட்சி மன்றங்கள் தெரிந்து கொள்வதற்குரிய
வாய்ப்பினை ஏற்படுத்துவதன் மூலம் ஊராட்சி மன்றங்களை
மேம்படுத்துவதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்கள்
அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்பது
எனது கருத்தாகும் என அவர் சொன்னார்.
இந்த ஆணைய உருவாக்கத்தின் மூலம் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு
விரைவாகப் பதவி உயர்வை நாம் வழங்க முடியும் என்று அவர்
குறிப்பிட்டார். நேற்று இங்குள்ள எம்.பி.எஸ்.ஏ. மெர்டேக்கா சதுக்கத்தில்
நடைபெற்ற வாகனமில்லா தின நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
மக்களின் புகார்களுக்கு பதிலளிப்பதற்கான கால அவகாசம் உள்பட
சேவைத் தரத்தை மேம்படுத்துவதற்காக ஊராட்சி மன்ற சேவை
ஆணையம் அமைக்கப்படும் என்று கடந்த மாதம் 10ஆம் தேதி மாநில
சட்டமன்றத்தில் 2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தைத்
தாக்கல் செய்த போது மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
தெரிவித்தார்.
வரும் 2024 முதலாம் காலாண்டில் தொடக்கப்படும் என எதிர்பார்க்கப்படும்
இந்த ஆணையம் தொடர்பில் மாநில சட்டமன்றத்தில் இம்முறை விவாதம்
நடத்தப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.




