ஷா ஆலம், நவ. 17 - சிலாங்கூரில் உள்ள சமூக வேளாண் தோட்டங்கள் மூலம் ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 64 டன் புதிய காய்கறிகள் மற்றும் பழங்களை உற்பத்தி செய்ய முடிகிறது என்று மாநில விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹாஷிம் தெரிவித்தார்.
புதிய விளைபொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க நகர்ப்புற வேளாண் திட்டத்தை மாநில அரசு தொடங்கியுள்ளதாக அவர் சொன்னார்.
விவசாயத் தொழில் முனைவோர்கள் மத்தியில் உற்பத்தித்திறன் மற்றும் தன்னிறைவு ஆகிய இரண்டையும் மேம்படுத்துவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூரில் உள்ள சமூக வேளாண் தோட்டங்கள் சிறிய அளவில் இருப்பது போல் தோன்றினாலும் அவை ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 64 டன் காய்கறிகள் மற்றும் பழங்களை உற்பத்தி செய்வதில் குறிப்பிடத்தக்கப் பங்கை வகிக்கின்றன என அவர் குறிப்பிட்டார்.
நாங்கள் அவர்களுக்கு உள்ளூர் அதிகாரிகள் மூலம் ஆதரவளிப்பது மட்டுமல்லாமல் அவர்கள் தங்கள் உற்பத்திப் பொருள்களை விற்க 'பாசார் தானி' போன்ற இடங்களில் வர்த்தக வாய்ப்பையும் ஏற்படுத்தித் தருகிறோம் என்று அவர் இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் கூறினார்.
நவீன நகர்ப்புற விவசாயத்தின் மூலம் மக்களின் வருமானத்தை உயர்த்துவதற்கான மாநில அரசின் முயற்சிகள் மற்றும் நகர்ப்புற விவசாயத் துறையில் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து பண்டா பாரு கிளாங் சட்டமன்ற உறுப்பினர் குவா பெர்ங் ஃபெய் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்
சமூகத் தோட்ட முன்னெடுப்பு சிலாங்கூர் வேளாண் உருமாற்றத் திட்டத்தின் ( 2021-2025) முக்கிய அங்கமாக விளங்குகிறது. பெண்கள் மற்றும் இளைஞர்களிடையே ஆர்வத்தை வளர்ப்பதன் மூலம் விவசாயத் துறையை முறையாக மேம்படுத்துவதையும் செயல்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது என அவர் தெரிவித்தார்.




