ஷா ஆலம், நவ 17- யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் அறவாரியத்தின் ஆதரவுடன் சிலாங்கூர் இந்திய தொழில் ஆர்வலர் மையம் (சித்தம்) இரண்டு நாள் டிக் டாக் சூப்பர் வியூகப் பயிற்சித் திட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.
இவ்வாண்டிற்கான இந்த மூன்றாம் கட்டப் பயிற்சி இம்மாதம் 28 மற்றும் 29ஆம் தேதிகளில் கிளானா ஜெயா டி.எச். ஹோட்டலில் நடைபெறவுள்ளது. முதல் நாள் காலை 8.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும் மறுநாள் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரையிலும் இந்த பயிற்சி நடைபெறும்.
இந்திய தொழில் முனைவோரை இலக்காகக் கொண்ட பயிற்சி முற்றிலும் இலவசமாக நடத்தப்படுவதுடன் பங்கேற்பாளர்களுக்கு தங்குமிட வசதியும் உணவும் இலவசமாக ஏற்பாடு செய்து தரப்படுகிறது என்று சித்தம் நிர்வாகி கென்னத் சேம் தெரிவித்தார்.
இந்த இரண்டு நாள் பயிற்சியில் டிக் டாக் என்றால் என்ன? வர்த்தகத்தில் அந்த செயலியின் பயன்பாடு, பொருட்களை விளம்பரப்படுத்தும் முறை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்துப் பயிற்சி வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.
பலரும் டிக் டாக்கில் தங்கள் வர்த்தகத்தை விளம்பரப்படுத்தி வருகின்றனர். ஆனால், அதனை எவ்வாறு முறையாகச் செய்வது என்று பலருக்குத் தெரிவதில்லை.
தங்கள் விற்பனைப் பொருள்களைக் காட்சிப்படுத்துவது, வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் வாசகங்களைப் பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நுணுக்கங்கள் இந்தப் பயிற்சியில் கற்றுத் தரப்படுகிறது. இந்த பயிற்சியில் தற்போது வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. வர்த்தகத்தில் ஈடுபட ஆர்வம் உள்ளவர்களும் இதில் கலந்து கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.
பங்கேற்பாளர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இந்தப் பயிற்சி மலாய் மற்றும் தமிழ் மொழியில் நடத்தப்படுவதாகக் கூறிய அவர், இந்தப் பயிற்சியை முடித்தவர்கள் தங்கள் வர்த்தகத்தைச் சமூக ஊடகங்கள் வாயிலாகச் சந்தைப்படுத்துவதற்குரிய ஆற்றலைப் பெற்றிருப்பர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.




