ஷா ஆலம், செப் 17 - இந்திய சமூகத்தின் நடப்புத் தேவைகளை
உள்ளடக்கிய முழுமையான மற்றும் விரிவானத் திட்டத்தை மாநில அரசு
அறிமுகப்படுத்த வேண்டும் என செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்
ஜி. குணராஜ் வலியுறுதியுள்ளார்.
இந்திய சமுதாயத்தில் உள்ள பி40 தரப்பினரை ஏழ்மை நிலையிலிருந்து
மீட்பதற்கு ஏதுவாக இந்த புதிய திட்டம் வரும் 2024ஆம் ஆண்டில்
அமல்படுத்தப்படுவது அவசியமாகிறது என்று மாநில சட்டமன்றத்தில்
அவர் குறிப்பிட்டார்.
இந்திய சமூகத்தை தொழில்முனைவோர் துறையில் மேம்படுத்துவதற்கு
அறிமுகப்படுத்தப்பட்ட சித்தம் (சிலாங்கூர் இந்திய தொழில் ஆர்வலர்
மையம்) மற்றும் ஹிஜ்ரா போன்ற முன்னெடுப்புகள் அவற்றின் இலக்கை
அடைந்து விட்ட நிலையில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்காக
உருவாக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் கணிசமானத்
தொகையை வழங்குவதன் மூலம் அப்பள்ளிகள் சிறந்த கல்வியை
மாணவர்களுக்கு வழங்குவதை உறுதி செய்து வரும் மாநில அரசு இந்த
உதவியை இனியும் தொடரும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர்
கூறினார்.
அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட அடுத்தாண்டிற்கான வரவு செலவுத்
திட்டத்தில் தமிழ்ப்பள்ளிகளுக்கான மானியம் குறித்து எதுவும்
குறிப்பிடப்படாத போதிலும் அப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு தேவையான
திட்டங்களை மாநில அரசு கொண்டிருக்கும் என நான் நம்புகிறேன் என்றார்
அவர்.
மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகள் தங்கி
படிப்பதற்கு ஏதுவாக ஷா ஆலம், மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியில் தங்கும்
விடுதியை நிர்மாணித்ததற்காக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின்
ஷாரிக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் சொன்னார்.
அதே சமயம், இதே போன்ற தங்கும் விடுதி திட்டத்தை உலு
சிலாங்கூரிலும் மாநில அரசு அமல்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்
கொண்டார்.
மாநில சட்டமன்றத்தில் நேற்று 2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்
திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர்
இந்த கோரிக்கைகளை முன்வைத்தார்.




