ஷா ஆலம், நவ 14- மாநிலத்தில் 790 இடங்களில் எல்.இ.டி. விளக்குகளைப்
பொருத்துவதற்கு மாநில அரசு ஏறக்குறைய 60 லட்சம் வெள்ளியைச்
செலவிட்டுள்ளதாக அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.
மின்சார வசதி இல்லாத, மின்சாரக் கேபிள்கள் அடிக்கடி திருடும் போகின்ற
மற்றும் விபத்துகள் அதிகம் நிகழ்கின்ற பகுதிகளில் இந்த பிரகாசமிக்க
எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டன என்று அவர் சொன்னார்.
ஒதுக்குப்புறமான பகுதிகளில் உள்ள சாலை சந்திப்புகள் மற்றும் தெனாகா
நேஷனல் நிறுவனத்தின் மின் இணைப்புச் சேவை இல்லாத இடங்களில்
இந்த எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டன. ஒவ்வொரு விளக்கையும்
பொருத்துவதற்கு சராசரி 7,565 வெள்ளி செலவிடப்பட்டது என்றார் அவர்.
மாநில சட்டமன்றத்தில் இன்று மேரு தொகுதி உறுப்பினர் மரியாம்
அப்துல் ரஷிட் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு
தெரிவித்தார்.
மாநிலத்திலுள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் சூரிய ஒளியில்
இயங்கக்கூடிய 1,000 சோலார் விளக்குகள் பொருத்தப்படும் என்று
தொழில்துறைக்கான முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங்
சாங் கிம் கடந்த மார்ச் மாதம் கூறியிருந்தார்.
சிறு திட்டங்களை அமல்படுத்துவதன் மூலம் வட்டார பொருளாதாரத்திற்குப்
புத்துயிரளிக்க்க இவ்வாண்டு வரவு செலவுத் திட்டத்தில் பி.எஸ்.பி.
எனப்படும் சிலாங்கூர் பென்யாயாங் முன்னெடுப்புக்கு மாநில அரசு 2
கோடியே 80 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்திருந்தது.




