சுபாங் ஜெயா, நவ 14 - மாநில அரசின் ஏஹ்சான் ரஹ்மா விற்பனையில்
உறையவைக்கப்பட்ட ஆட்டிறைச்சி மற்றும் இயற்கையான புதிய பால்
ஆகியவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.)
தயாரிப்பு பொருள்களை பிரபலபடுத்தும் தளமாக இந்த மலிவு விற்பனை
விளங்குவதாக அக்கழகத்தின் விற்பனை பிரிவு தலைமை
ஒருங்கிணைப்பாளர் நாஸிஃப் ஜூல்கிப்ளி கூறினார்.
பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட 500 முதல் 600 கிராம் வரையிலான
ஆட்டிறைச்சி 12.00 வெள்ளி விலையிலும் புதிய பால் ஒரு போத்தல் 3.00
வெள்ளி விலையிலும் விற்கப்படும். நான்கு போத்தல் பால் வாங்கினால்
அதன் விலை 10.00 வெள்ளியாக நிர்ணயிக்கப்படும் என அவர் சொன்னார்.
இந்த புதிய பொருள்களை ஏஹ்சான் ரஹ்மா விற்பனையில்
அறிமுகப்படுத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம். பொதுமக்களிடமிருந்து
நல்ல வரேவேற்பு கிடைக்கும் பட்சத்தில் அனைத்து இடங்களிலும் இந்த
பொருள்களின் விற்பனை தொடரும் என அவர் தெரிவித்தார்.
இன்று இங்குள்ள ஸ்ரீ செர்டாங், பி.கே.என்.எஸ். குடியிருப்பில் நடைபெற்ற
ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனையின் போது அவர் இதனைக் கூறினார்.
இந்த பொருள்களை ஷா ஆலம் செக்சன் 14இல் உள்ள விஸ்மா
பி.கே.பி.எஸ். செக்சன் 19 ஏஹ்சான் பி.கே.பி.எஸ்., மேரு, தாமான் டத்தோ
பண்டார் ஜாலான் முவாபாகாட் 1, ஏஹ்சான் பி.கே.பி.எஸ். ஆகிய
இடங்களிலும் பெற முடியும் என அவர் சொன்னார்.
ஜூவாலான் ஏஹ்சான் ராக்யாட் எனும் இந்த மலிவு விற்பனைத் திட்டம்
உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின்
ஒத்துழைப்புடன் ஜூவாலான் ஏஹ்சான் ரஹ்மா எனும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு மாநிலத்தின் அனைத்து தொகுதிகளிலும்
நடத்தப்பட்டு வருகிறது.




