ஷா ஆலம், நவ 14 - தேவையை அடிப்படையாக கொண்ட சேவை
முறையை (டி.ஆர்.டி.) அமல்படுத்துவதற்கு ஏதுவாக சில தடங்களில்
ஸ்மார்ட் சிலாங்கூர் இலவசப் பஸ் சேவையை நிறுத்துவதற்கான
சாத்தியத்தை மாநில அரசு ஆராய்ந்து வருகிறது.
வீண் விரயத்தை தடுக்கும் நோக்கில் இந்த உத்தேச நடைமுறை மீது
ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக போக்குவரத்து துறைக்கான மாநில
ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
சில தடங்களில் மாநில அரசின் இந்த இலவச பஸ் சேவைக்கு குறைவான
வரவேற்பு கிடைத்து வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்த திட்டத்திற்கு
மாநில அரசு செய்யும் நிதி ஒதுக்கீடு முழுமையாக பயனளிப்பதை உறுதி
செய்ய ஸ்மார்ட் சிலாங்கூர் பஸ் வழித்தடங்களை மறுஆய்வு செய்யும்படி
அனைத்து ஊராட்சி மன்றங்களும் பணிக்கப்பட்டுள்ளன என்றார்.
சில தடங்களில் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளதை
நாங்கள் அறிந்துள்ளோம். அதன் காரணமாகவே டி.ஆர்.டி. முறையை
அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்று மாநில சட்டமன்றத்தில் அவர்
தெரிவித்தார்.
வட்டார மக்களுக்கு கூடுதல் சேவைகளை வழங்குவதற்கு ஏதுவாக
எதிர்காலத்தில், அடுத்தாண்டில் அல்லது வரும் 2025இல் நடப்பிலுள்ள
வழித்தடங்களில் சில டி.ஆர்.டி. முறைக்கு மாற்றப்படலாம் என்றார் அவர்.
கோல லங்காட் போன்ற பகுதிகளில் ஸ்மார்ட் சிலாங்கூர் பஸ்களுக்கு
கிடைத்து வரும் குறைவான வரவேற்பு காரணமாக இந்த பஸ்
சேவையின் பயன்பாடு குறித்து மாநில அரசு ஆய்வு மேற்கொண்டு
வருகிறதா என்று சிஜங்காங் உறுப்பினர் அகமது யூனுஸ் ஹைரி
கேள்வியெழுப்பியிருந்தார்.
இந்த புதிய டி.ஆர்.டி. திட்டம் வரும் நவம்பர் 20ஆம் தேதி
அதிகாரப்பூர்வமாக தொடங்கவுள்ளதாக கூறிய அவர், இதன் முன்னோடித்
திட்டம் பூச்சோங், கோம்பாக், அம்பாங். சுபாங் ஜெயா ஆகிய பகுதிகளில்
அமல்டுத்தப்படும் என்றார்.
இந்த முன்னோடித் திட்டம் ஆறு மாதங்களுக்கு அமலில் இருக்கும்.
மக்களின் ஆதரவை பொறுத்து மேலும் எட்டு தொகுதிகளுக்கு இத்திட்டம்
விரிவுபடுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.




