கோலாலம்பூர், நவ 14 - பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்குப் பல
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்ததைத் தொடர்ந்து மிரட்டுதல்,
லஞ்சம், ஆசை வார்தை காட்டுதல் தொடர்பில் செய்யப்பட்ட போலீஸ்
புகார்கள் தொடர்பான விவகாரம் இன்றைய மக்களவைக் கூட்டத்தில்
முக்கிய இடத்தைப் பெறும்.
அமைச்சர்களின் கேள்வி நேரத்தின் போது பத்து பகாட் தொகுதி
ஹராப்பான் உறுப்பினர் ஓன் அபு பாக்கார் உள்துறை அமைச்சரிடம் இந்த
கேள்வியை முன் வைப்பார் என்று நாடாளுமன்ற அகப்பக்கத்தில்
வெளியிடப்பட்ட இன்றைய கூட்ட நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பள்ளிகளில் பகடிவதை நிகழும் போதும் பள்ளி நிர்வாகங்கள் கடைபிடிக்க
வேண்டிய சீரான செயலாக்க நடைமுறை (எஸ்.ஒ.பி.) மற்றும் இதன்
தொடர்பில் போலீசில் செய்யப்பட்ட புகார்கள், நீதிமன்றத்தில் எடுக்கப்பட்ட
நடவடிக்கைகள் குறித்து சபாக் பெர்ணம் தொகுதி பெரிக்கத்தான் நேஷனல்
உறுப்பினர் கலாம் சலான் கல்வியிமைச்சரிடம் விளக்கம் கோருவார்.
இலக்கவியல் தொழில்முனைவோரின் ஆற்றலை பெருக்குவதற்கும்
மேம்பாட்டுத் திட்டங்களை அமல்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும்
திட்டங்கள் குறித்து தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு
அமைச்சரிடம் சுங்கை பூலோ தொகுதி பக்கத்தான் ஹராப்பான் உறுப்பினர்
டத்தோ ஆர்.ரமணன் கேட்கவிருக்கிறார்.
கிக் பொருளாதாரத் துறையில் குறிப்பாக உணவு பட்டுவாடா தொழிலில்
ஈடுபட்டுள்ளவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும் அளவுக்கு கட்டண
மறுஆய்வு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் மின்-அழைப்பு நிறுவனத்
தரப்பினருடன் போக்குவரத்து அமைச்சு நடத்திய சந்திப்பின் முடிவுகள்
குறித்து ஜூலாவ் தொகுதி உறுப்பினர் லேரி சிங் வேய் சியான்
போக்குவரத்து அமைச்சரிடம் கேள்வியை முன்வைப்பார்.




