கோலாலம்பூர், நவ 14 - பண்டார் பூச்சோங் உத்தாமா 6இல் உள்ள சுபாங் ஜெயா நகராண்மைக் கழக கார் நிறுத்துமிடத்தில் மண் உள்வாங்கியதால் மொத்தம் 6 வேன்கள் மற்றும் ஒரு லாரி சேதமடைந்தன.
கனத்த மழையைத் தொடர்ந்து நேற்று மாலை 6.46 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகவும் இதில் உயிருடற்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் அகமது முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
இதன் தொடர்பில் புகார் கிடைத்ததைத் தொடர்ந்து பூச்சோங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் ஒன்பது உறுப்பினர்கள் நிலைமையைக் கண்காணிக்க சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என அவர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட பகுதி பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்த தீயணைப்பாளர்கள் மண் சரிவிலிருந்து வாகனங்களை அகற்றும் பணியை சம்பவம் நடந்த இடத்தில் இருந்த மாநகர் மன்ற அதிகாரிகள் மற்றும் காவல்துறையிடம் ஒப்படைத்தனர் என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.




