ஷா ஆலம், நவ 14- டியூஷன் ராக்யாட் சிலாங்கூர் (பி.டி.ஆர்.எஸ்.)
திட்டத்தின் வாயிலாக அடுத்தாண்டு நான்காம் மற்றும் ஐந்தாம் படிவம்
பயிலும் சுமார் 130,000 மாணவர்கள் பயனடைவர் என
எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட 2024 வரவு செலவுத் திட்டத்தில் இந்த
இலவச டியூஷன் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 70 லட்சம்
வெள்ளியிலிருந்து ஒரு கோடி வெள்ளியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக
மந்திரி புசார் கழகத்தின் (எம்.பி.ஐ.) நிறுவன சமூகக் கடப்பாடு மற்றும்
வர்த்தகப் பிரிவுத் தலைவர் அகமது அஸ்ரி ஜைனால் கூறினார்.
இந்த திட்டத்தின் கீழ் அடுத்தாண்டில் ஐந்தாம் படிவ மாணவர்கள் அல்லது
எஸ்.பி.எம்.தேர்வு எழுதுவோர் மட்டுமின்றி நான்காம் படிவம் பயிலும்
மாணவர்களும் இலக்காக கொள்ளப்படுவர் என்று அவர் சொன்னார்.
மாநில அரசின் கித்தா சிலாங்கூர் வாக்குறுதிக்கேற்ப அடுத்த
ஐந்தாண்டுகளில் 200,000 மாணவர்கள் இந்த திட்டத்தின் வாயிலாகப்
பயனடைவதை உறுதி செய்வதை இந்த திட்டம் நோக்கமாகப்
கொண்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
கல்வியின் அளவுகோளாக விளங்கும் எஸ்.எம்.பி. தேர்வில் மாணவர்கள்
சிறப்பான அடைவு நிலையைப் பதிவு செய்வதில் மாநில அரசுக்கு உள்ள
கடப்பாட்டை உறுதி செய்யும் விதமாக இத்திட்டத்திற்கு கூடுதலாக 30
லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
பி.டி.ஆர்.எஸ். திட்ட அமலாக்கத்திற்கு அடுத்தாண்டு கூடுதலாக 30 லட்சம்
வெள்ளி ஒதுக்கப்படுவதாக கடந்த வெள்ளிக்கிழமை 2024ஆம் ஆண்டிற்கான
வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்த போது மந்திரி புசார்
கூறியிருந்தார்.
கடந்தாண்டு இந்த் திட்டத்திற்கு மாநில அரச 70 லட்சம் வெள்ளியை
ஒதுக்கியிருந்தது. இந்த கூடுதல் ஒதுக்கீட்டின் மூலம் இந்த பி.டி.ஆர்.எஸ்.
திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை ஒரு கோடி வெள்ளியாக உயர்வு
கண்டுள்ளது.




