கிள்ளான், நவ 8 - கற்றலில் சிரமத்தை எதிர்நோக்கியிருக்கும்
மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்காக செந்தோசா சட்டமன்றத்
தொகுதி சேவை மையம் பிரத்தியேக வகுப்புகளை நடத்தி வருகிறது.
தீபாவளியை முன்னிட்டு இந்த பிரத்தியேக வகுப்பில் பயிலும்
மாணவர்களுக்காக நேற்று சிறப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்ட செந்தோசா
சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ், மாணவர்களோடு அளவலாவி
அன்பைப் பகிர்ந்து கொண்டதோடு அவர்களுக்கு தீபாவளி
அன்புளிப்புகளையும் வழங்கினார்.
கல்வியில் பின்தங்கியிருக்கும் இம்மாணவர்களுக்கு பெற்றோர்களின்
அரவணைப்பும் கூடுதல் கவனிப்பும் தேவைப்படுவதாக குணராஜ்
சொன்னார். கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு இந்த பிரத்தியேக
வகுப்பு ஒரு வரப்பிரசாதமாக விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பெற்றோர்களின் சவால்மிகுந்த வாழ்க்கைப் பின்னணி காரணமாக
இத்தகைய மாணவர்கள் கல்வியில் முழுமையாக கவனம் செலுத்த
முடியாத நிலையில் உள்ளனர். இவர்களுக்கு உதவும் நோக்கில் இந்த
வகுப்பை நாங்கள் தொடக்கினோம்.
இந்த வகுப்புகள் இடைவிடாது நடைபெறுவதை உறுதி செய்வதில் பெரும்
பங்காற்றி வரும் மேத்தியுஸ், ஸ்டெல்லா, ஷாரோன், அனிதா, டாக்டர்
உமா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
சமூகப் பின்னணி மற்றும் பெற்றோர்களின் அக்கறையின்மை காரணமாகக்
கல்வி வாய்ப்பை தவற விட்ட மற்றும் முறையான ஆவணங்கள் இல்லாத
சிறார்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய உதவிகள் செய்து
கல்வியைத் தொடர்வதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்துகிறோம் என அவர்
தெரிவித்தார்.
கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களை இந்த வகுப்புகளில் சேர்க்கும்படி
பெற்றோர்களைக் குணராஜ் கேட்டுக் கொண்டார்.




