ஷா ஆலம், நவ 8 - வெள்ளம் காரணமாக உலு லங்காட், தேசிய பள்ளியில்
அமைக்கப்பட்ட தற்காலிக நிவாரண மையத்தில் தங்கியுள்ள 83 பேருக்கு
பேரிடர் மேலாண்மை அமைப்பின் வாயிலாக உணவுப் பொட்டலங்களும்
அத்தியாவசியப் பொருள்களும் வழங்கப்பட்டன.
இப்பகுதியில் வெள்ள நிலவரம் குறித்து பேரிடர் மேலாண்மை
அமைப்பிடமிருந்து தாம் விளக்கத்தைப் பெற்றதாக பேரிடர் மேலாண்மைத்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது நஜ்வான் ஹலிமி கூறினார்.
நேற்று காலை நான் பாங்கி தேசிய பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வெள்ள
நிவாரண மையத்திற்கு வருகை புரிந்தேன். கடந்த ஞாயிற்றுக்கிழமை
ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 19 குடும்பங்களைச் சேர்ந்த 83 பேர்
இங்கு தங்கியுள்ளனர்.
அந்த நிவாரண மையத்தில் தங்கியுள்ளவர்களுக்கு மாநில அரசின் சார்பில்
வழங்கப்பட்ட உலர் உணவுப் பொருள்கள் மற்றும் அத்தியாவசியப்
பொருள்களை ஒப்படைத்தேன் என்று அவர் தனது எக்ஸ் பதிவில்
குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளைத் துப்புரவு செய்யும் பணி கட்டங்
கட்டமாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் சொன்னார். இந்த பணியில்
அரசு மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கவுள்ளனர்
என்றார் அவர்.
நேற்று காலை 8.00 மணி நிலவரப்படி மாநிலம் முழுவதும் உள்ள 10
துயர் துடைப்பு மையங்களில் 174 குடும்பங்களைச் சேர்ந்த 685 பேர் தங்க
வைக்கப்பட்டுள்ளனர்.




