அம்பாங், நவ 7- இம்மாதம் 12ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அம்பாங் தொகுதி நிலையிலான
தீபாவளி கொண்டாட்டம் மற்றும் தீபாவளி விற்பனைச் சந்தை கடந்த
சனிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.
அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் இந்த நிகழ்வை
அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த வேளையில் தொழில் முனைவோர்
மற்றும் கூட்டுறவுத் துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி
கந்தசாமி, அம்பாங் ஜெயா நகராண்மை கழக உறுப்பினர்களான ஆர்.
மோகன் ராஜ், கே.தனபால் உள்ளிட்ட பிரமுகர்கள் இதில் கலந்து
கொண்டனர்.
இந்த விற்பனைச் சந்தையில் அமைக்கப்பட்டுள்ள 30 கடைகளில் தீபாவளி
பலகாரங்கள், உடைகள், உணவுப் பொருள்கள், வீட்டு அலங்காரப்
பொருள்கள், அணிகலன்கள் உள்ளிட்ட பொருள்கள் விற்பனைக்கு
வைக்கப்பட்டுள்ளன.
இங்குள்ள பண்டார் பாரு அம்பாங், ஸ்பெக்ட்ரம் கார் நிறுத்துமிடத்தில்
2ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தீபாவளி
கொண்டாட்டம் மற்றும் தீபாவளி சந்தையை அம்பாங் தொகுதி சேவை
மையம் சித்தம் எனப்படும் சிலாங்கூர் இந்தியர் தொழில் ஆர்வலர்
மையத்தின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த சந்தையின் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய ரோட்சியா
இஸ்மாயில் அம்பாங் தொகுதி மக்களின் தேவைகளை
நிறைவேற்றுவதற்காக தாம் அனைத்து அமைச்சர்களையும் அணுகி
வேண்டிய உதவிகளைப் பெற்று வருவதாகக் கூறினார்.
இன வேறுபாடின்றி இத்தொகுதியிலுள்ள அனைத்து இன மக்களின்
மேம்பாட்டிற்காகத் தாம் தொடர்ந்து பாடுபடப் போவதாக கூறிய அவர், இந்த தீபாவளி சந்தை நிகழ்வும் சிறிய அளவில் இல்லாமல் பிரமாண்டமான அளவில் நடத்தப்படுவதில் தாம் முனைப்பு காட்டியதாகக் குறிப்பிட்டார்.




