சுபாங் ஜெயா, நவ 2- வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்காக
மூன்று துறைகளுடன் இணைந்து பேரிடர் தயார் நிலைப் பயிற்சியில்
சுபாங் ஜெயா மாநகர் மன்றம் ஈடுபட்டு வருகிறது.
பேரிடரின் உண்மையான சூழலை எதிர் கொள்வது தொடர்பான உரிய
ஆற்றலைக் பணியாளர்கள் கொண்டிருப்பதை உறுதி செய்யும் நோக்கில்
இந்த பயிற்சி வழங்கப்படுவதாக சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் துணை
டத்தோ பண்டார் முகமது ஜூல்கர்னாய்ன் சே அலி கூறினார்.
இன்று நாங்கள் சுபாங் ஜெயா மற்றும் செர்டாங் மாவட்ட போலீஸ்
தலைமையகங்கள், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, மலேசிய பொது
தற்காப்பு படை (ஏ.பி.எம்.) ஆகிய தரப்பினருடன் இணைந்து பயிற்சியில்
ஈடுபட்டோம்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு ஏதுவாக சாதனங்கள்
மற்றும வசதிகள் ரீதியாக மட்டுமின்றி சவால்களை எதிர்கொள்வதற்கான
தயார் நிலை குறித்தும் பயிற்சிகள் வழங்கப்பட்டன என அவர்
தெரிவித்தார்.
இங்குள்ள பூச்சோங் பிரிமா ஏரியில் இந்த பயிற்சியை தொடக்கி வைத்தப்
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான்
மாமாட் மற்றும் செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.ஏ. அன்பழகன்
ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த பயிற்சியில் பந்தாஸ் எனப்படும் விரைவு நடவடிக்கை குழுவின் 110
உறுப்பினர்கள் பங்கு கொண்டதாக முகமது ஜூர்கர்னாய்ன் தெரிவித்த்தார்.
பெட்டாலிங் பிராந்தியத்திற்கான தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினால்
நடத்தப்பட்ட இந்த பயிற்சியில் படகுகளைச் செலுத்துவது, பாதிக்கப்பட்டவர்களை மீட்பது மற்றும் பத்திரமாக வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்துவது தொடர்பான அம்சங்கள் கற்றுத் தரப்பட்டன என்றார் அவர்.




