ஷா ஆலம், நவ 2- இம்மாதம் 12ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கோல சிலாங்கூர் நாடாளுமன்றத்
தொகுதியிலுள்ள வசதி குறைந்த 1,150 குடும்பங்களுக்கு ஷோம் ஷோப்பிங்
பற்றுச் சீட்டுகள் விநியோகிக்கப்பட்டன.
இந்த நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மூன்று சட்டமன்றத்
தொகுதிகளில் இந்த பற்றுச் சீட்டுகள் கட்டங் கட்டமாக
விநியோகிக்கப்பட்டதாகத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்
ஜூல்கிப்ளி அகமது கூறினார்.
புக்கிட் மெலாவத்தி தொகுதியைச் சேர்ந்த 400 பேருக்கும் ஈஜோக்
தொகுதியைச் சேர்ந்த 400 பேருக்கும் ஜெராம் தொகுதியைச் சேர்ந்த 350
பேருக்கும் 200 வெள்ளி மதிப்பிலான இந்த பற்றுச் சீட்டுகள்
விநியோகிக்கப்படுகின்றன என்று அவர் தனது பேஸ்புக் பதிவில்
குறிப்பிட்டார்.
புக்கிட் மெலாவத்தி தொகுதி உள்ளவர்கள் 200 வெள்ளிக்கான இந்த பற்றுச்
சீட்டுகளைப் பயன்படுத்தி கடந்த ஞாயிற்றுக் கிழமை கோல சிலாங்கூர்
லோட்டஸ் பேரங்காடியில் தங்களுக்குத் தேவையான பொருள்களை
வாங்கிக் கொண்டனர். ஜெராம் மற்றும் ஈஜோக் மக்களுக்கு வார
இறுதியில் இந்த பற்றுச் சீட்டுகள் பகிர்ந்தளிக்கப்படும் என அவர்
சொன்னார்.
வசதி குறைந்தவர்களும் தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கு கொள்வதை
உறுதி செய்யும் நோக்கில் இந்த திட்டத்தை மாநில அரசு
அமல்படுத்தியுள்ளதாக கூறிய அவர், பெருநாளுக்கு தேவையான
பொருள்களை வாங்குவதில் அவர்களுக்கு ஏற்படக்கூடிய பொருளாதாரச்
சுமையை இதன் மூலம் குறைக்க இயலும் என்றார் அவர்.




