ஷா ஆலம், செப் 1- தாமான் ஸ்ரீ மூடா ‘டி‘ பிரிவு குடியிருப்பாளர் சங்க பிரதிநிதிகளுடன் கோத்தா கெமுனிங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சாம்புநாதன் நேற்று சந்திப்பு நடத்தினார்.
தாமான் ஸ்ரீ மூடா குடியிருப்பாளர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டது. இந்த சந்திப்பில் இ குடியிருப்பு பகுதி எதிர்நோக்கி வரும் வெள்ளப் பிரச்சனை பிரதான இடத்தைப் பிடித்தது.
இந்த குடியிருப்பில் உள்ள மக்கள் எதிர்நோக்கி வரும் வெள்ளப் பிரச்சனை தொடர்பாக குடியிருப்பாளர் சங்கப் பிரதிநிதிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பிரகாஷ் பதில் அளித்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் மேலும் விரிவான மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்கள் ஸ்ரீ மூடா வட்டார மக்கள் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக வடிகால் மற்றும் நீர் பாசனத்துறை அதிகாரிகளை உள்ளடக்கிய விளக்கமளிப்புக் கூட்டத்திற்கு தாம் ஏற்பாடு செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இவ் வட்டாரத்தில் வெள்ள அபாயம் மிகுந்த மற்றும் பிரச்சனைக்குரிய பகுதிகளை வட்டார மக்களுடன் பிரகாஷ் நேரில் சென்று பார்வையிட்டார்.
மாநில அரசும் ஷா ஆலம் மாநகர் மன்றமும் மேற்கொண்டு வரும் பல்வேறு வெள்ளத் தடுப்பு திட்டங்கள் வாயிலாக எதிர்காலத்தில் தாமான் ஸ்ரீ மூடா வெள்ளத்தில் விடுபட்ட பகுதியாக விளங்கும் எனத் தாம் நம்புவதாகவும் அவர தெரிவித்தார்.
இந்த சந்திப்பு நிகழ்வில் ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் ராமு நடராஜனும் கலந்து கொண்டார்.








