காஜாங், நவ 1- இம்மாதம் 12ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தீபாவளிப் பெருநாளை முன்னிட்டு காஜாங் சட்டமன்றத் தொகுதியிலுள்ள வசதி குறைந்த 450 பேருக்கு இலவச பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டன.
இந்த பற்றுச் சீட்டுகளைப் பெற்றவர்கள் கடந்த ஞாயிற்றுக் கிழமை காஜாங் லோட்டஸ் பேரங்காடியில் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டனர்.
பெருநாளைக் கொண்டாடுவதில் வசதி குறைந்தவர்கள் எதிர் நோக்கும் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்தப் பற்றுச் சீட்டுகள் வழங்கப்படுவதாகக் காஜாங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டேவிட் சியோங் கியான் யோங் கூறினார்.
கடந்த ஆண்டுகளில் 100 வெள்ளியாக இருந்த இந்த பற்றுச்சீட்டுகளின் மதிப்பு இவ்வாண்டு தொடங்கி 200 வெள்ளியாக அநிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
இந்த பற்றுச் சீட்டைப் பெறுவதற்கு 1,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் வசதி குறைந்த மற்றும் பி40 பிரிவைச் சேர்ந்த 450 பேர் தேர்வு செய்யப்பட்டனர் என்றார் அவர்.
நாட்டில் கொண்டாடப்படும் அனைத்து இனங்களின் முக்கியப் பெருநாளின் போது வசதி குறைந்தவர்களுக்கு உதவும் நோக்கில் மாநில அரசு இந்த பெருநாள் கால ஜோம் ஷோப்பிங் திட்டத்தை அமல் படுத்தி வருகிறது.
தீபாவளியை முன்னிட்டு மாநிலம் முழுவதும் உள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 22,000 பற்றுச் சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு அண்மையில் கூறியிருந்தார்.
இத்திட்டத்திற்காக மாநில அரசு 44 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.








