காஜாங், அக்.31- தீபாவளிப் பெருநாள் நெருங்கி வருவதை முன்னிட்டு டுசுன் துவா சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 350 பேருக்கு ஜோம் ஷோப்பிங் இலவசப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாகத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், டத்தோ ஜோஹான் அப்துல் அஜிஸ் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில அரசு வசதி குறைந்த பி40 தரப்பினருக்குத் தீபாவளிக்குத் தேவையானப் பொருள்களை வாங்குவதற்கு ஏதுவாக 200 வெள்ளி மதிப்பிலான பற்றுச் சீட்டுகளை வழங்கி வருகிறது.
சிலாங்கூர் மாநில அரசின் இந்த திட்டம் விரைவில் தீபாவளிப் பெருநாளைக் கொண்டாடவிருக்கும் இந்தியர்களுக்குப் பெரு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பற்றுச் சீட்டைப் பெற்றவர்கள் கடந்த ஞாயிற்றுக் கிழமை தாமான் செகார் பெர்டானாவிலுள்ள எகோன்சேவ் பேரங்காடியில் தங்களுக்குத் தேவையானப் பொருட்களை வாங்கிக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் உலு லாங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது சானி ஹம்சான், ம.இ.கா உலு லாங்காட் தொகுதித் துணைத் தலைவர் ராசசெல்வம், டத்தோ மகேந்திரன் உட்பட பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.








