ஷா ஆலம், அக் 31- சிலாங்கூர் மாநில நிலையிலான இவ்வாண்டிற்கான தீபாவளி கொண்டாட்ட நிகழ்வு எதிர்வரும் நவம்பர் 4ஆம் தேதி கிள்ளான் லிட்டில் இந்தியா, செட்டி பாடாங்கில் நடைபெறும்.
இரவு மணி 7.00 தொடங்கி 11.00 மணி வரை நடைபெறும் விருந்துடன் கூடிய இந்த நிகழ்வில் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சிறப்பு பிரமுகராக கலந்து கொள்வார் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பா ராய்டு கூறினார்.
“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு“ எனும் கருப் பொருளிலான இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்ட நிகழ்வில் பாரம்பரிய நடனங்கள், ஆடல் பாடல் அங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த கோலாகல நிகழ்வில் 2,000 முதல் 5,000 பேர் வரை கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுவதாக கூறிய அவர், விழாவுக்கு மெருகூட்டும் வகையில் அனைவரின் பங்கேற்பும் தாங்கள் பெரிதும் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு தீபாவளி பொது உபசரிப்பு முஹிபா உணர்வுடன் கொண்டாடப்படும். இத்தகைய நிகழ்வுகளின் வாயிலாக மாநிலத்திலுள்ள பல்லின மக்களிடையே சகோதரத்துவத்தை வளர்க்கவும் நல்லிணக்கத்தைப் பேணவும் வாய்ப்பு ஏற்படும் என்றார் அவர்.
இந்த நிகழ்வின் சிறப்பு அங்கமாக உயர் கல்விக் கூடங்களில் பயிலும் 147 மாணவர்களுக்கு 590,000 வெள்ளி உதவித் தொகையாக வழங்கப்படும். மேலும் மாநிலத்தில் உள்ள 53 ஆலயங்களுக்கு மாநில அரசின் மானியமாக 515,000 வெள்ளி பகிர்ந்தளிக்கப்படும் எனவும் பாப்பாராய்டு சொன்னார்.
ஒற்றுமை அரசின் தலைவர்களும் பங்கேற்க இருக்கும் இந்த பொது உபசரிப்பில் கலந்து கொள்வோர் அதிர்ஷ்டக் குலுக்கல் வாயிலாக கவர்ச்சிகரமான பரிசுகளை வெல்வதற்குரிய வாய்ப்பினையும் பெறுவர்.








