ஷா ஆலம், அக் 31: அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படும் சிலாங்கூர் பட்ஜெட் 2024இல் தொழிலாளர் அதிகாரமளித்தல் மற்றும் வறுமை ஒழிப்பு திட்டங்கள் தொடர்பான முக்கிய நடவடிக்கைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிலாங்கூர் மாநில வறுமை ஒழிப்பு உதவித் திட்டமும் மேம்படுத்தப்பட்டு அதிக மக்கள் பயனடைவதை உறுதிசெய்யும் என்று மனித வளங்கள் மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் நம்புகிறார்.
"வர்த்தகர்களுக்கு கருவிகளை வழங்கும் திட்டம் தொடர வேண்டும் மற்றும் மேம்படுத்தப்பட வேண்டும். அது அவர்களின் வணிகத்தைத் தொடரவும் விரிவுபடுத்தவும் உதவும்.
"இந்திய தொழில் முனைவோரின் உபகரண உதவித் திட்டம் (I-SEED) போன்ற பிற திட்டங்கள் வணிகத் துறையில் அவர்களின் திறனை மேம்படுத்த உதவுவதற்காக விரிவுபடுத்தப்படும்" என்று வீ.பாப்பாராய்டு நேற்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
வறுமை ஒழிப்புத் திட்டத்தை மேம்படுத்துவதற்காக மாநிலம் முழுவதும் உள்ள தீவிர ஏழைகள் குறித்த விவரங்களைத் தனது தரப்பு தீவிரமாகச் சேகரித்து வருவதாகப் பாப்பாராய்டு கூறினார்.
"இந்தக் குழுவின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த சிலாங்கூர் ஹிஜ்ரா அறக்கட்டளை (ஹிஜ்ரா) உட்பட அனைத்துத் தரப்பினருடனும் நாங்கள் ஒத்துழைத்து வருகிறோம்," என்று அவர் கூறினார்.
2016 முதல் இப்போது வரை, மொத்தம் 3,256 வியாபாரிகள், வர்த்தகர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் சிலாங்கூர் மாநில வறுமை ஒழிப்பு திட்ட உதவியின் மூலம் RM13.6 மில்லியன் ஒதுக்கீட்டில் வணிகக் கருவிகளைப் பெற்றுள்ளனர்.








