கிள்ளான், அக் 31- இங்குள்ள லிட்டில் இந்தியா பகுதியில் சட்டவிரோதமாக
வியாபாரம் அந்நிய நாட்டினருக்கு கிள்ளான் நகராண்மைக் கழகம் தலா
1,000 வெள்ளி அபராதம் விதித்தது. நகராண்மைக் கழகத்தின் 2007ஆம்
ஆண்டு அங்காடி வியாபார துணைச் சட்டத்தின் கீழ் இந்நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டது.
தீபாவளியை முன்னிட்டு உணவு விற்பனை டிரக்குகள் மூலம் அவர்கள்
பல்வேறு பலகாரங்களை விற்று வந்ததாகக் கிள்ளான் நகராண்மைக்
கழகத்தின் சந்தை மற்றும் அங்காடி மேலாண்மைத் துறையின் இயக்குநர்
அஸ்ஹார் சம்சுடினை மேற்கோள் காட்டி தி ஸ்டார் நாளேடு செய்தி
வெளியிட்டுள்ளது.
அங்காடிக் கடைகள் மற்றும் உணவு டிரக்குகள் மூலம் அந்நிய நாட்டினர்
வியாபாரம் செய்வதை நகராண்மைக் கழகம் அனுமதிக்காது என்பதோடு
லைசென்ஸ் இன்றி மேற்கொள்ளப்படும் அத்தகைய வர்த்தக
நடவடிக்கைகள் சட்டவிரோதமானைவை எனக் கருதப்படும் என்று அவர்
சொன்னார்.
இந்த சோதனை நடவடிக்கையில் இரு அந்நிய நாட்டினர் டைப்பாய்டு
தடுப்பூசியை செலுத்தாதது கண்டு பிடிக்கப்பட்டதாகக் கூறிய அவர்,
இத்தகையோரிடமிருந்து உணவுகளை வாங்கும் பயனீட்டாளர்கள் சுகாதாரப்
பிரச்சனையை எதிர்நோக்கும் அபாயம் உள்ளது என்றார்.
உணவு விற்பனையில் ஈடுபட்டவர்கள் கட்டாயம் டைப்பாய்டு தடுப்பூசி
செலுத்தியிருக்க வேண்டும் என 1979ஆம் ஆண்டு உணவுக் கையாள்வோர்
துணைச் சட்டம் வலியுறுத்துவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளும்படி அந்நிய
வர்த்தகர்களுக்கு இம்மாதம் 16ஆம் தேதி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும்
எனினும், மறுநாள் அவர்கள் தொடர்ந்து வர்த்தகத்தை நடத்தியதைத் தொடர்ந்து சம்பந்தப்பட் டிரக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது என்றார் அவர்.
லிட்டில் இந்தியா பகுதியில் அந்நிய நாட்டினர் அணிகலன்களை விற்பது
மற்றும் கிளி ஜோசியம் பார்ப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை
நகராண்மைக் கழகம் கண்டறிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்டவர்களுக்கு நாங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளோம்.
எச்சரிக்கையை மீறும் பட்சத்தில் வர்த்தகப் பொருள்களைப் பறிமுதல்
செய்வோம் என்றார் அவர்.








