கிள்ளான், அக் 31- நாட்டில் பிரசித்தி பெற்ற இந்திய வர்த்தக மையங்களில்
ஒன்றாக விளங்கி வரும் கிள்ளான் லிட்டில் இந்தியா பகுதியில்
இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு 153 தற்காலிகக் கடைகளுக்குக்
கிள்ளான் நகராண்மைக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது.
லோரோங் திங்காட் பகுதியில் 143 கடைகளுக்கும் ஜாலான் தாலி ஆயரில்
10 கடைகளுக்கும் வர்த்தக லைசென்ஸ் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகக்
கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் சந்தை மற்றும் அங்காடி
மேலாண்மைத் துறையின் இயக்குநர் அஸ்ஹார் சம்சுடின் கூறினார்.
போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் என்பதால் லிட்டில் இந்தியாவின்
பிரதான சாலையாக விளங்கும் ஜாலான் தெங்கு கிளானா மற்றும்
லோரோங் ரெம்பாவ் சாலை நெடுகிலும் அங்காடிக் கடைகள் அமைத்து
வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படாது என அவர் சொன்னார்.
லோரோங் திங்காட்டில் கடந்தாண்டு 400 வெள்ளியாக இருந்த தீபாவளி
கடைகளுக்கான வாடகை இவ்வாண்டு 600 வெள்ளியாக
அதிகரிக்கப்பட்டுள்ளது. மின்சாரக் கட்டணமும் இந்த வாடகையில்
உள்ளடங்கியுள்ளதே இதற்கு காரணமாகும் என அவர் குறிப்பிட்டார்.
அதே சமயம், ஜாலான் தாலி ஆயரில் கடைகளுக்கு 397 வெள்ளி வாடகை
விதிக்கப்படுவதாக கூறிய அவர், எனினும், வியாபாரிகள் மின்சார
விநியோகத்திற்கு சொந்தமாக ஜெனரேட்டர் இயந்திரங்களைப் பயன்படுத்த
வேண்டும் என்றார்.
தீபாவளிச் சந்தை சீராக நடைபெறுவதை உறுதி செய்யவும் சட்டவிரோத
வியாபார நடவடிக்கைகளைத் தடுக்கவும் நகராண்மைக் கழகத்தின்
அமலாக்க அதிகாரிகள் வரும் 11ஆம் தேதி வரை லோரோங் திங்காட்டில்
நிறுத்தப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜாலான் தெங்கு கிளானாவில் உள்ள கடை உரிமையாளர்கள் மட்டுமே
தங்கள் வியாபாரப் பொருள்களை கடையின் நடைபாதையில் காட்சிக்கு
வைக்க அனுமதிக்கப்படுவர் என்றும் அஸ்ஹார் சொன்னார்.
நடைபாதையில் வியாபாரம் செய்ய அந்நியர்களுக்கு கடை
உரிமையாளர்கள் அனுமதி வழங்க மாட்டார்கள் என நாங்கள்
எதிர்பார்க்கிறோம். இத்தகைய நடவடிக்கைள் நடைபாதைகளைப்
பயன்படுத்துவோருக்கு இடையூறை ஏற்படுத்தும் என அவர் கூறினார்.








