கோம்பாக், அக் 30 - சிலாங்கூர் அரசு வெளிப்படையாகவும் அனைத்து
சமூகங்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு இடையே சமநிலையை
ஏற்படுத்தவும் தொடர்ந்து முயன்று வருகிறது மந்திரி புசார் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி கூறினார்.
அத்தகைய முயற்சிகளில் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர்
ஆரம்பிக்கப்பட்ட “சித்தம்“ எனப்படும் சிலாங்கூர் இந்திய தொழில் ஆர்வலர்
மையமும் ஒன்றாகும் என்று அவர் சொன்னார்.
சிலாங்கூர் அரசு வெளிப்படையானது. எழுகின்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு
காண்கிறோம். இவ்வாறு செய்யும் பட்சத்தில் மாநிலத்திற்கு
நிலைத்தன்மையைக் கொண்டு வர முடியும் என நம்புகிறோம் என்று
அவர் தெரிவித்தார்.
சரும நிற வேறுபாடின்றி அனைத்து மக்களின் நலனையும் காத்து
வருகிறோம். கடந்தாண்டு சித்தம் திட்டத்திற்கு பத்து லட்சம் வெள்ளியை
ஒதுக்கீடு செய்தோம். வரும் ஆண்டுகளில் இந்திய சமூகத்திற்கு
ஒதுக்கப்படும் நிதி 30 லட்சம் வெள்ளி அல்லது 40 லட்சம் வெள்ளியாக
இருக்கலாம் என்றார் அவர்.
இங்குள்ள மெர்கியூ ஹோட்டலில் கெஅடிலான் கட்சியின்
இயக்கவாதிகளுடனான நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இதனைத்
தெரிவித்தார்.
கடந்த நான்கு ஆண்டுகளில் சித்தம் திட்டங்களுக்காக 29 லட்சம் வெள்ளி
செலவிடப்பட்டுள்ளதாக யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் அறவாரியம்
கடந்த வாரம் கூறியிருந்தது.
அக்காலக்கட்டத்தில் 3,730 தொழில்முனைவோர் சித்தம் வழங்கிய
பல்வேறு பயிற்சிகள், திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் வாயிலாகப் பயன் பெற்றதாக யாயாசன் ஹிஜ்ரா தலைமைச் செயல்முறை அதிகாரி மேரியா ஹம்சா தெரிவித்தார்.








