ஷா ஆலம், அக் 30- நேற்று இங்கு நடைபெற்ற பத்து தீகா தொகுதி
நிலையிலான ஜூவாலான் ஏஹ்சான் ரஹ்மா விற்பனையில் தொகுதிக்கு
வெளியிலிருந்தும் பொது மக்கள் வந்து கலந்து கொண்டனர்.
இங்குள்ள செக்சன் 18, சூராவ் அல்-அமினில் நடைபெற்ற இந்த மலிவு
விற்பனையில் பங்கேற்பதற்காக பூச்சோங்கிலிருந்து 40 நிமிடப் பயணம்
மேற்கொண்டு தாம் வந்ததாக அபு பாக்கார் ஹம்சா (வயது 50) கூறினார்.
சந்தையை விட குறைவான விலையில் தரமானப் பொருள்களை
வாங்குவதற்குரிய வாய்ப்பு கிடைப்பதால் இந்த மலிவு விற்பனைகளில்
தாம் விடாது கலந்து கொள்வதாக லோரி ஓட்டுநரான அவர் சொன்னார்.
பூச்சோங்கில் இந்த மலிவு விற்பனை நடைபெறாத பட்சத்தில் நான் ஷா
ஆலமிற்கு வருவேன். இவ்விரு இடங்களிலும் நடைபெறும் மலிவு
விற்பனைகளை நான் தவறவிட்டதில்லை என்று அவர் தெரிவித்தார்.
இன்று நான் அரிசி, கோழி, முட்டை, மீன் மற்றும் இதர சமையல்
பொருள்களை வாங்கினேன். இந்த விற்பனை அதிகமான இடங்களில்
நடத்தப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன் என்று குறிப்பிட்டார்.
இதனிடையே, குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினருக்கு இந்த
மலிவு விற்பனை பெரிதும் துணை புரிவதாக ஙா கிம் யூ (வயது 53)
கூறினார்.
இந்த மலிவு விற்பனைகளில் அதிகமானோர் பங்கேற்பதற்கு ஏதுவாக
சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்.)
கூடுதலாக வரிசை எண்களை விநியோகிக்கும் என எதிர் பார்க்கிறேன் என
அவர் தெரிவித்தார்.
விரைவில் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளிக்கான முன்னேற்பாடாக
தாம் அரசி, முட்டை, கோதுமை போன்ற பொருள்களை வாங்குவதாக
குடும்ப மாதான எம். கோமதி (வயது 38) சொன்னார்.
இந்த மலிவு விற்பனையை ஏற்பாடு செய்த பி.கே.பி.எஸ்.
நிர்வாகத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தீபாவளி நெருங்கி
வரும் வேளையில் இதுபோன்ற மலிவு விற்பனைகள் அதிகளவில்
நடைபெறும் என எதிர்பார்க்கிறேன் என்றார் அவர்.








