சிப்பாங், அக் 30 - சிலாங்கூரில் உள்ள மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மொத்தம் 1,553 உறுப்பினர்கள் வரும் நவம்பர் முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரையிலான வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்படக்கூடிய தாக்கங்களை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றனர்.
உறுப்பினர்கள் அனைவரும் படகு கையாளுதல் வலுப்படுத்தும் பயிற்சி மற்றும் நீர் மீட்புப் பயிற்சி பெற்று வருவதாக அதன் இயக்குனர் வான் முகமது ரசாலி வான் இஸ்மாயில் கூறினார்.
நாங்கள் படகுகளின் எண்ணிக்கையை 46 இலிருந்து 81ஆக உயர்த்தியுள்ளதோடு அனைத்து சாதனங்களும் நல்ல நிலையில் உள்ளதை உறுதி செய்வதற்காக அவற்றின் மீது தொடர்ச்சியாக சோதனை மேற்கொண்டு வருகிறோம் என அவர் குறிப்பிட்டார்.
பேரழிவு ஏற்படும் சாத்தியத்தை எதிர்கொள்ள தன்னார்வத் தீயணைப்புப் படையினர் மற்றும் இதரத் துறைகளின் ஒத்துழைப்பை தாங்கள் நாடியுள்ளதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக அவர் இங்குள்ள சைபர்ஜெயா, தாமான் தாசேக்கில் நடைபெற்ற வடகிழக்கு பருவமழை தயார்நிலை மாதம் மற்றும் நீர் செயல்பாடுகள் பாதுகாப்பு பிரச்சார நிகழ்வில் கலந்து கொண்டார்.
பேரிடர் மேலாண்மைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி இந்நிகழ்வைத் தொடக்கி வைத்தார்.
அனைத்து தீயணைப்பு வீரர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், அவசியம் ஏற்படும் படசத்தில் அவர்களின் வேலை நேரம் 24 மணி நேரமாக மாற்றப்படும் என்றார்.
வெள்ள அபாயம் உள்ள 390 இடங்களை அவரது தமது தரப்பு அடையாளம் கண்டுள்ளதாகவும் அவற்றில் உலு லங்காட்டில் அதிகமாக அதாவது 78 இடங்களும் அதற்கு அடுத்த நிலையில் கிள்ளானில் 65 இடங்களும் உள்ளன என சொன்னார்.
இவை தவிர, சிப்பாங்கில் 54 பகுதிகளும், கோல சிலாங்கூரில் 51 இடங்களும் , பெட்டாலிங்கில் 44 இடங்களும் கோம்பாக்கில் 33 இடங்களும் கோல லங்காட்டில் 30 இடங்களும், சபாக் பெர்ணமில் 20 இடங்களும் உலு சிலாங்கூரில் 15 இடங்களும் வெள்ள ஆபத்து அதிகம் உள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன என்றார் அவர்.








