சுபாங் ஜெயா, அக் 25 - நேற்று தொடங்கி 14 நாட்களுக்குள் சட்டவிரோதக் குப்பைக் கொட்டும் மையமாக மாறிய நிலத்தைத் துப்புரவு செய்யும்படி சுபாங் ஜெயா மாநகர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.
பூச்சோங் பெர்டானா தொழில்பேட்டையில் உள்ள அந்த காலி நிலத்தை
அதன் உரிமையாளர் முறையாகப் பராமரிக்காததால் அவ்விடத்தை
பொறுப்பற்றத் தரப்பினர் சட்டவிரோதக் குப்பைக் கொட்டும் மையமாக
மாற்றியதைத் தொடர்ந்து மாநகர் மன்றம் இந்த உத்தரவைப்
பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவைப் பின்பற்றத் தவறினால் அந்த நில உரிமையாளருக்கு
25,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படும் என்று மாநகர் மன்றத்தின்
வர்த்தக மற்றும் வியூக மேலாண்மைத் துறையின் துணை இயக்குநர்
அஸ்பரிஷால் அப்துல் ரஷிட் கூறினார்.
அப்பகுதியில் குப்பை கொட்டும் நடவடிக்கையை மேற்கொண்ட தரப்பினருக்கு கடந்த ஆகஸ்டு மாதம் 11ஆம் தேதி வழங்கப்பட்ட இரண்டு மாத கால அவகாசம் முடிவுக்கு
வந்ததைத் தொடர்ந்து அங்குள்ள மண்வாரி இயந்திரம் மற்றும் ரோரோ
எனப்படும் நடமாடும் குப்பை சேகரிப்பு தோம்புகளை பறிமுதல்
செய்வதற்கான நோட்டீசும் வழங்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
சுபாங் ஜெயா மாநகர் மன்றம் மேற்கொண்ட சோதனையில் அங்கு குப்பை
கொட்டும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவது
கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த மாதம் 23ஆம் தேதி
குற்றப்பதிவு வெளியிடப்பட்டது என்றார் அவர்.
அந்த சட்டவிரோதக் குப்பைக் கொட்டும் மையம் தொடர்ந்து செயல்படாமலிருப்பதை உறுதி செய்வதற்கு ஏதுவாக அம்மையத்திற்குச் செல்லும் அனைத்து வழிகளும் மூடப்பட்டு பெரிய கற்களைக் கொண்டு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது என அவர் சொன்னார்.








