கோலாலம்பூர், அக் 19: வர்த்தகம் புரிவதற்குத் தென்கிழக்காசியாவின்
முதலாவது இடமாகச் சிலாங்கூர் விளங்குகிறது என்று மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இன்று இங்கு நடைபெற்ற 2023ஆம் ஆண்டிற்கான சிலாங்கூர் அனைத்துலக
வர்த்தக உச்சநிலை மாநாட்டில் உரையாற்றிய அவர், வெற்றிக்கான
அனைத்து மூலகங்களையும் கொண்டுள்ள மாநிலமாகச் சிலாங்கூர்
விளங்குகிறது என்று சொன்னார்.
உங்கள் பணத்தை முதலீடு செய்வதற்குத் தென்கிழக்காசியாவிலுள்ள ஒரு
மாநிலத்தை நீங்கள் தேடினால் உங்கள் பணத்திற்கு மதிப்பைத் தருவதற்கு
சிலாங்கூரைத் தவிர வேறு இடம் கிடைக்காது என்றார் அவர்.
எனது இந்தக் கருத்தை நீங்கள் அனைவரும் ஏற்றுக் கொள்வீர்கள் என
நம்புகிறேன். இல்லாவிட்டால் நான் இன்று இந்த இடத்தில் இருக்க
மாட்டேன் என்று அவர் குறிப்பிட்டார்.
உற்பத்தி, பொருள் பட்டுவாடா, மருந்தகம் உள்பட பல்வேறு கலவையான
துறைகளின் வாயிலாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்
கால்பங்கை வழங்கும் மாநிலம் இந்த பிராந்தியத்தில் கிடையாது என்றும்
அவர் சொன்னார்.
உலகின் பரபரப்பான துறைமுகங்களில் சிலாங்கூர் 12வது இடத்தில்
உள்ளது. இரு அனைத்துலக விமான நிலையங்களையும் ஒரு வட்டார
விமான நிலையத்தையும் (சுபாங்) கொண்டிருக்கிறோம். இந்த விமான
நிலையத்தை விரிவாக்கும் பணியும் தற்போது மேற்கொள்ளப்பட்டு
வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
நாம் பெரிய உயர்கல்விக் கூடங்களையும் பிரகாசமான சிந்தனைகளையும்
கொண்டிக்கிறோம். சிலாங்கூர்வாசிகள் மட்டுமின்றி மற்றவர்களும்
இம்மாநிலத்தை தங்கள் தாயகமாக கருதுகின்றனர். உங்கள்
முதலீடுகளுக்குத் தேவையான ஆள்பலத்தை தரும் ஆற்றலையும் நாம்
கொண்டிருக்கிறோம் என அவர் சொன்னார்.
இவை யாவும் வெற்று வாக்குறுதிகளோ வெறும் கனவுகளோ அல்ல.
சிலாங்கூரில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் வர்த்தக
நடவடிக்கைகளை மேற்கொள்ள நாங்கள் கடுமையான உழைப்பை
வழங்கியுள்ளோம் என்றார் அவர்.








