ஷா ஆலம், அக் 18- அடுத்த மாதம் 12ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தீபாவளியை முன்னிட்டு மாநில அரசு வழங்கும் பெருநாள் பற்றுச் சீட்டுகளுக்கு விண்ணப்பிக்கும்படி தொகுதியிலுள்ள இந்துக்களை ஸ்ரீ கெம்பாங்கான், கம்போங் துங்கு மற்றும் கோத்தா டாமன்சாரா தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த பற்றுச் சீட்டுகளுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை வரை விண்ணப்பிக்கலாம் என்று கோத்தா டாமன்சாரா தொகுதி உறுப்பினர் இஸுவான் காசிம் கூறினார்.
மாதம் 3,000 வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறும் குடும்பங்களை இலக்காகக் கொண்ட இத்திட்டத்தில் தொகுதியைச் சேர்ந்த 400 பேருக்கு வாய்ப்பு வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
கோத்தா டாமன்சாராவைச் சேர்ந்த இந்துக்கள் இந்த பற்றுச் சீட்டுகளுக்கு தொகுதி சேவை மையம் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம். கணவன்/மனைவியின் அடையாளக் கார்டு நகல்களை உடன் கொண்டு வர வேண்டும். பிங்காஸ் மற்றும் எஸ்.எம்.யு.இ. திட்ட பயனாளிகள் இந்தப் பற்றுச் சீட்டுகளுக்கு விண்ணப்பிக்க முடியாது என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே, 200 வெள்ளி மதிப்புள்ள இந்த பற்றுச் சீட்டுகளுக்கு வரும் திங்கள் கிழமைக்குள் முறையான ஆவணங்களுடன் தொகுதி சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம் என ஸ்ரீ கெம்பாங்கான் உறுப்பினர் வோங் சுய் கீ சொன்னார்.
கம்போங் துங்கு தொகுதியில் உள்ளவர்கள் இம்மாதம் 31ஆம் தேதிக்குள் தொகுதி சேவை மையத்தில் பற்றுச் சீட்டுகளுக்கு மனு செய்யலாம் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லிம் யீ வேய் கூறினார்.








