ஷா ஆலம், அக். 18- அடுத்த ஆண்டு மக்களின் நலவாழ்வுக்காக பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதால் 2024ஆம் ஆண்டிற்கான மாநில அரசின் வரவு செலவுத் திட்டத்தில் தங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு நம்புகிறது.
ஐம்பதாயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் 12வது மலேசிய திட்ட இலக்கை இதன் மூலம் ஒருங்கிணைக்க முடியும் என்று ஆட்சிக்குழு உறுப்பினர் போர்ஹான் அமான் ஷா கூறினார்.
ரூமா சிலாங்கூர் கூ திட்டங்கள் மீது கவனம் செலுத்துவதோடு கைவிடப்பட்ட திட்டங்களையும் நாங்கள் கருத்தில் கொள்வோம் . மேம்பாட்டாளர்களுக்கு தொழில்நுட்ப உதவி தேவைப்படலாம். மேலும் மக்கள் சொந்தமாக வீடுகளை வைத்திருப்பதை உறுதிப்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
அதே நேரத்தில், செரியா திட்டத்தின் மூலம் மக்கள் வீட்டுத் திட்டங்களை (பி.பி.ஆர்.) மறுசீரமைக்கவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம். உதாரணமாக, லிஃப்ட் எனப்படும் மின்தூக்கியை மேம்படுத்துவதன் மூலம் குடியிருப்பாளர்களின் வாழ்க்கைத் தரத்தைப் பராமரிக்க முடியும் என்று அவர் கூறினார்.
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வரும் நவம்பர் மத்தியில் சிலாங்கூர் மாநில சட்டமன்ற அமர்வில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முன்னதாக தெரிவித்திருந்தார் .
மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜின் ஒப்புதலுக்காக மாநில அரசு காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.








