ஷா ஆலம், அக் 18- கிள்ளான் நகராண்மைக் கழக அமலாக்கப் பிரிவினர்
மேருவில் நேற்று மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் அந்நிய
நாட்டினர் நடத்தி வந்த இரு மினிமார்க்கெட்டுகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
அவ்விரு மினி மார்க்கெட்டுகளும் முறையான வர்த்தக உரிமம் மற்றும்
விளம்பர அனுமதியைப் பெற்றிராதது அச்சோதனையில்
கண்டறியப்பட்டதாக நகராண்மைக் கழகம் தனது பேஸ்புக் பக்கத்தில்
குறிப்பிட்டது.
ஜாலான் பாசார் பாருவிலுள்ள ஆறு கடைகள் மீது சோதனை
மேற்கொள்ளப்பட்டது. அதில் சமையல் பொருள்கள் மற்றும் உறைய
வைக்கப்பட்ட உணவுகளை விற்பனை செய்து வந்த இரு மினி
மார்க்கெட்டுகள் சீல் வைக்கப்பட்டன என்று அது தெரிவித்தது.
கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் 2007ஆம் ஆண்டு வர்த்தக மற்றும்
தொழில் துறை லைசென்ஸ் துணைச் சட்டத்தின் 3வது பிரிவின் கீழ்
இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த பதிவில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட அனைத்துப் பொருள்களும் மேல்
நடவடிக்கைக்காக நகராண்மைக் கழகத்தின் அமலாக்க பிரிவு கிடங்கில்
வைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, நேற்று முன்தினம் பண்டமாரான், புக்கிட் திங்கி மற்றும்
மேருவில் நகராண்மைக் கழகம் மேற்கொண்ட சோதனையில்
அந்நியர்களுக்குச் சொந்தமான 12 அங்காடிக் கடைகளுக்கு சீல்
வைக்கப்பட்டது.








