ஷா ஆலம், அக் 17- அடுத்த மாதம் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி
பண்டிகையை முன்னிட்டு வசதி குறைந்தவர்களுக்கு ஷோம் ஷோப்பிங்
பற்றுச்சீட்டுகளை கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியின் சேவை
மையம் வழங்குகிறது.
தகுதி உள்ளவர்கள் இம்மாதம் 16ஆம் தேதி தொடங்கி வரும் 25ஆம் தேதி
வரை இந்த பற்றுச் சீட்டுகளைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று
தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சாம்நாதன் தனது பேஸ்புக்
பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
முதலில் வருவோருக்கு முதல் வாய்ப்பு என்ற அடிப்படையில் இந்த
பற்றுச்சீட்டுகள் விநியோகிக்கப்படுவதாக அவர் கூறினார்.
தகுதி உள்ளவர்கள் கணவன்/மனைவி இருவரின் அடையாளக் கார்டு நகல்,
மின்சார,நீர் கட்டண பில், சம்பள அறிக்கை மற்றும் வருமானக் கணக்கு
ஆகியவற்றுடன் கெமுனிங் உத்தாமாவில் உள்ள தொகுதி சேவை
மையத்தில் இந்த பற்றுச் சீட்டுகளுக்கு விண்ணப்பம் செய்யும்படி கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்.
இந்த ஷோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளைப் பெறுவதற்கு விண்ணப்பம்
செய்வோர் 18 முதல் 59 வயது வரையிலான கோத்தா கெமுனிங்
வாக்காளராகவும் மாத குடும்ப வருமானம் 3,000 வெள்ளிக்கும் குறைவாக
உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் குடும்பத்தினர் இதர தொகுதி சேவை மையங்களில்
ஷோம் ஷோப்பிங் பற்றுசீட்டுக்கு விண்ணப்பம் செய்யாதவர்களாக அல்லது
பற்றுச் சீட்டுகளைப் பெறாதவர்களாக இருத்தல் அவசியம்.
பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வுத் திட்டம் மற்றும்
எஸ்.எம்.யு.இ. எனப்படும் மூத்த குடிமக்கள் பரிவு திட்டத்தின் வழி பயன்
பெறுவோர் இத்திட்டத்தில் பங்கு பெற இயலாது. ஒரு குடும்பத்திற்கு ஒரு
ஷோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டு மட்டுமே வழங்கப்படும்.
மேல் விபரங்களுக்கு 03-51314354 என்ற தொலைபேசி எண்களில் தொகுதி
சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம்.








