கிள்ளான், அக் 12- அடுத்த மாதம் 12ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு செந்தோசா தொகுதி சேவை மையம்
வசதி குறைந்தவர்களுக்குப் பற்றுச் சீட்டுகளை வழங்கவுள்ளது.
செந்தோசா தொகுதி வாக்காளர்களுக்காகப் பிரத்தியேகமாக ஏற்பாடு
செய்யப்பட்டுள்ள இந்த பற்றுச் சீட்டு திட்டத்தில் பங்கு கொள்ள
விரும்புவோர் இன்று 12ஆம் தேதி தொடங்கி இம்மாதம் 20ஆம் தேதிக்குள்
பதிவு செய்து கொள்ளலாம்.
மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் குறைந்த வருமானம்
பெறும் பி40 தரப்பினருக்கு இந்த திட்டத்தில் முதல் வாய்ப்பு வழங்கப்படும்.
இந்த தீபாவளி பற்றுச் சீட்டைப் பெறுவதற்கான நிபந்தனைகள் வருமாறு-
-இந்த பற்றுச் சீட்டுக்கு விண்ணப்பம் செய்பவர் தீபாவளியைக்
கொண்டாடும் சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
-செந்தோசா தொகுதியின் பதிவு பெற்ற வாக்காளராக (சிலாங்கூர்
மாநிலத்தில்) இருத்தல் அவசியம்.
- விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் 3,000 வெள்ளிக்கும் குறைவாக
இருக்க வேண்டும்.
- ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டும் இந்த பற்றுச் சீட்டுக்கு விண்ணப்பிக்க
முடியும்.
- பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டத்தில் பங்கு
பெறாதவர்களாக இருக்க வேண்டும்.
- எஸ்.எம்.யு.இ. எனப்படும் மூத்த குடிமக்கள் நட்புறவுத் திட்டம் மற்றும்
எஸ்.எம்.ஐ.எஸ். எனப்படும் ஸ்கிட் மெஸ்ரா இன்சான் இஸ்திமேவா
திட்டத்தின் கீழ் உதவி பெறாதவர்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை
அளிக்கப்படும்.








